செங்கோட்டை- புனலூர் அகல ரயில்பாதை பணிகள் துரிதம்: மக்கள் மகிழ்ச்சி

தமிழக, கேரள மாநிலங்களை இணைக்கும் முக்கிய நகரமாக செங்கோட்டை விளங்குகிறது. இவ்வழியாகச் செல்லும் திருவனந்தபுரம் ரயில்பாதை மிகவும் பழமையான நீளமான மீட்டர்கேஜ் பாதையாகும். இந்தியாவில் மீட்டர்கேஜ் பாதைகள் அகல ரயில் பாதைகளாக மாறி வரும் நிலையில் கடந்த 1997-98ம் ஆண்டு கொல்லம்-விருதுநகர்-திருநெல்வேலி-திருச்செந்தூர் அகல ரயி்ல் பாதை திட்டம் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 357 கிமீ தூரம் உள்ள இந்த அகல ரயில் பாதை பணிகளை 4 கட்டமாக மேற்கொள்ள திட்டம் வகுக்கப்பட்டது.
அதன்படி விருதுநகர்-செங்கோட்டை, நெல்லை-திருச்செந்தூர், புனலூர்-கொல்லம் ஆகிய பகுதிகளில் பணிகள் முடிவடைந்து அகல ரயில் பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது தென்காசி-நெல்லை மார்க்கத்தில் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இத்திட்டத்தின் கடைசி பகுதியான செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதை பணிகள் தற்போது துவங்கியுள்ளது. செங்கோட்டை-புனலூர் மார்க்கம் மலை பாதையில் அமைந்துள்ளது. இந்த மார்க்கத்தில் 5 மலை குகைகளும், ஏராளமான வளைவுகளும், பாலங்களும் உள்ளன.
அதனால் இப்பகுதியில் பணிகள் மேற்கொள்ள பல்வேறு சர்வே எடுக்கப்பட்டது. ரைட்ஸ் என்னும் உயர் தொழில்நுட்ப நிறுவனம் இப்பகுதியை ஆய்வு செய்து ரயில்வே நிர்வாக்கதிடம் அறிக்கை சமர்பித்தது. அதன்படி மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளும் வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் செங்கோட்டை-புனலூர் மார்க்கத்தில் இயங்கிக் கொண்டிருந்த பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டது.
சுமார் ரூ. 380 கோடி மதிப்பீட்டில் செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதை பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், 3 ஆண்டுகளில் இப்பணிகள் முடிவடையும் எனவும் ரயில்வே நிர்வாகம அறிவித்தது. இப்பணிகள் முடிவடைந்தால் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு அகல ரயில் பாதையில் ரயில்கள் இயக்கப்படும். இதன் மூலம் திருவனந்தபுரம் கொல்லம் பகுதியில் இருந்து சென்னைக்கு செல்வோர்க்கு 70 கிமீ தூரம் மிச்சமாகும் சூழ்நிலை ஏறபடும். 1997-ம் ஆண்டு விருதுநகர்-கொல்லம் அகல ரயில் பாதை திட்டம் துவங்கியதிலிருந்து இப்பகுதி மக்கள் எர்ணாகுளம், நாகர்கோவில், ஈரோடு சுற்றி செல்ல வேண்டியுள்ளது.
இந்நிலையில் செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பகவதிபுரம், எஸ் வளைவு, ஆரியங்காவு பகுதியில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
சபரி மலை பக்தர்கள்
இதனால் செங்கோட்டை, புளியரை, ஆரியங்காவு, புனலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இப்பணிகள் முடிவடைந்தால் செங்கோட்டை மற்றும் ஆரியங்காவு, புனலூர் சுற்று வட்டாரப்பகுதிகள் இயற்கை மற்றும ஆன்மீக சுற்றுலா தலமாக மாறும் வாய்ப்புள்ளது.
ஆண்டுதோறும் சபரிமலை சீசனில் லட்சக்கணக்கான பக்தர்கள் செங்கோட்டை வழியாக சபரிமலை செல்கின்றனர். அச்சன்கோவில், ஆரியங்காவு, குழத்துபுலா போன்ற இடங்களில் ஐயப்பன் கோவில்கள் உள்ளதால் இந்த வழியாக சபரி்மலை செல்வதையே பக்தர்கள் விரும்புகின்றனர்.
எனவே செங்கோட்டை-புனலூர் அகல ரயில்பாதை பணிகள் முடிவடைந்தால் இப்பகுதி பொருளாதாரம் முன்னேறவும் வாய்ப்புள்ளது. அத்துடன் இப்பகுதியில் ஏராளமான இயற்கை சுற்றுலா தலங்கள் உள்ளதால் அதிக அளவு சுற்றுலா பயணிகளும் வந்து செல்வர்.
மேலும், இங்கு விளையும் பொருட்களை எளிதாக இந்தியாவின் பல இடங்களுக்கும் கொண்டு செல்ல வாய்ப்பு ஏற்படும். எனவே இப்பகுதி மக்களின் வாழ்க்கை மேம்பாடு கருதி செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதை பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டுமென இங்குள்ள மக்கள் விரும்புகின்றனர்.












Click it and Unblock the Notifications