பினாயக் சென்னுக்கு தென் கொரியாவின் மிக உயரிய மனித உரிமை விருது!

சட்டீஸ்கரில் ஒடுக்கப்பட்ட பழங்குடி இன மக்களுக்கு மருத்துவ சேவை அளித்து வந்த சென், அவர்களது உரிமைகளுக்காகவும் போராடி வந்தார். மேலும் நக்ஸலைட்டுகளை ஒடுக்குவதற்காக அந்த மாநில அரசே உருவாக்கி, ஆதரவு தந்து, நடத்தி வந்த 'சல்வா ஜூதும்' என்ற வன்முறை இயக்கம் நடத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான மனித உரிமை மீறல்களையும் எதிர்த்து வந்தார்.
இதையடுத்து அவர் நக்ஸலைட்டுகளுக்கு உதவியதாக அந்த மாநில அரசால் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் நக்ஸல்கள் குறித்த புத்தகங்கள் இருந்ததாக அந்த மாநில அரசு குற்றம் சாட்டியது.
இதை எதிர்த்து பினாயக் சென் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், ஒருவர் தனது வீட்டில் மகாத்மா காந்தி புத்தகம் வைத்திருந்தால், அவர் காந்தியவாதியா என்று கேள்வி கேட்டு மாநில அரசை கண்டித்தது. நக்ஸல் புத்தகம் வைத்திருப்பது எப்படி நகஸல்களுக்கு உதவியதாகும் என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம் அவரை விடுவித்தது.
இதையடுத்து கடந்த திங்கள்கிழமை அவர் ஜாமீனில் விடுதலையானர். இந்நிலையில் 2011ம் ஆண்டின் மனித உரிமைக்கான 'குவாங்ஜூ' விருதை விநாயக் சென்னுக்கு வழங்குவதாக தென் கொரிய அரசு அறிவித்துள்ளது. அர்ப்பணிப்பு உணர்வுடன் ஏழைகளுக்கு சேவை செய்ததோடு, சமூக ரீதியான அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியதால் அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதாக தென் கொரியா அறிவித்துள்ளது.
இந்த விருது ஆசிய அளவில் அமைதி, ஜனநாயகம் மற்றும் நீதி போன்ற விஷயங்களுக்காக பாடுபட்டவர்களுக்கு வழங்கப்படுவதாகும்.
ஒவ்வொரு ஆண்டும் மே 18ம் தேதி இந்த விருது வழங்கப்படும். இந்த விருதுடன் 50,000 அமெரிக்க டாலர்களும் பரிசாக தரப்படும்.
இந்த விருதைப் பெறும் இரண்டாவது இந்தியர் பினாயக் சென் ஆவார். இதற்கு முன் இந்த விருதை மணிப்பூரைச் சேர்ந்த ஜரோம் ஷர்மிளா என்ற மனித உரிமை ஆர்வலர் பெற்றார்.
விநாயக் சென் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஏழைகளுக்கு சேவை செய்ததோடு, சமூக ரீதியான அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியவர் என்று விருதுக் குழு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications