லோக்பால் கமிட்டியில் தலித்துக்கு ஏன் இடமில்லை-மாயாவதி: திக்விஜய் சிங்கும் ஆதரவு
டெல்லி: லோக்பால் மசோதா வரைவுக் கமிட்டியில் தலித் யாரும் இடம் பெறாதது ஏன் என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.
மாயாவதியின் இந்தக் கேள்வி நியாயமானதே என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
அன்னா ஹசாரே தலைமையிலான இந்தக் கமிட்டியில் இடம் பெற்றுள்ள கர்நாடக லோக்ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, கர்நாடக மாநிலத்தில் ஊழலை ஒழித்துவிட்டாரா என்று கேள்வி கேட்டு பிரச்சனை கிளப்பினார் திக்விஜய்.
இதையடுத்து அந்தக் குழுவில் நீடிப்பது குறித்து மறுபரிசீலனை செய்யப் போவதாக ஹெக்டே அறிவித்துள்ளார். இந் நிலையில் லோக்பால் குழுவில் வரைவு குழுவில் இடம் பெற்றுள்ள 5 பேரில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லாததால் இந்தக் கமிட்டியை மறுநிர்ணயம் செய்ய வேண்டும் என உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், இந்தக் கமிட்டியில் ஒரு தலித்தை சேர்க்க வேண்டும் என்று அன்னா ஹசாரேவுக்கு ஏன் தோன்றவில்லை?. சிடி விவகாரம், நில சர்ச்சை உள்பட பிரச்சனைகளில் சிக்கியுள்ளவர்கள் யாரும் இந்தக் குழுவில் இடம் பெறக் கூடாது. யார் மீது சந்தேகம் எழுந்துள்ளதோ, அவர்கள் கூட்டுக் குழுவில் இருந்து விலக வேண்டும் என்றார்.
இதன்மூலம் லோக்பால் மசோதா உருவாக்கும் கூட்டு குழுவில் இருந்து சட்ட நிபுணர் சாந்தி பூஷண், அவருடைய மகன் பிரசாந்த் பூஷண் ஆகியோர் விலக வேண்டும் என்று மாயாவதி கூறியுள்ளார்.
மாயாவதியின் இந்தக் கோரிக்கைக்கு திக்விஜய் சிங் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். குழுவில் ஒரு தலித் பிரதிநிதியை சேர்க்க வேண்டும் என்ற மாயாவதியின் கோரிக்கை முழுக்க முழுக்க சரியானதே என்று அவர் கூறியுள்ளார்.
லோக்பால் குழுவில் மாற்றமில்லை-மத்திய அரசு:
இந் நிலையில் லோக் பால் குழுவை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் லோக்பால் மசோதாவை வரையறுக்கும் பணி எக்காரணம் கொண்டும் தடைபடாது என்றும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், பிரதமர் மன்மோகன் சிங்குடன் லோக்பால் மசோதா குழுவின் தலைவரான பிரணாப் முகர்ஜி ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய முகர்ஜி,
லோக்பால் மசோதா தயாரிக்கும் குழுவில் இடம் பெற்றுள்ள சில உறுப்பினர்கள் குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன. இப்போது எழுந்துள்ள சர்ச்சைகள் எந்த வகையிலும் குழுவின் செயல்பாட்டைப் பாதிக்கவில்லை. அரசின் சார்பாக இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும் அண்ணா ஹஸாரே உள்ளிட்டோருடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம் என்றார்.
மேலும் குழுவை மாற்றியமைக்கும் திட்டமில்லை என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியில் ஹசாரேவின் உறவினர்:
இந் நிலையில் ஹசாரேவின் நெருங்கிய உறவினர் ஒருவர் இன்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விநாயக் தேஷ்முக், ஹசாரேவின் சகோதரியின் மகன். இவர் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவில் இருந்தார். பின்னர், சில ஆண்டுகளுக்கு முன் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், அக்கட்சியின் செயல்பாடுகள் பிடிக்காத காரணத்தால் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைவதாக விநாயக் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications