பெரம்பலூர் அருகே சாலை விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் பலி
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே லாரியின் பின்புறம் கார் மோதியதில் 2 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.மேலும், இருவர் உயிருக்கு போராடி வருகின்றனர்.
சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். அவர் மனைவி தங்க அமிர்தம்(50). அவர்கள் மகன்கள் வெங்கடாசலம் (30), மாரிமுத்து (27). சோமசுந்தரம் உறவினர்கள் நடராஜன் (55). அவரது மனைவி சுசீலா (50), பாலா (37), பிரேம் (36).
அவர்கள் அனைவரும் சோமசுந்தரத்தின் இரண்டாவது மகன் மாரிமுத்துவுக்கு பெண் பார்க்க நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டைக்கு காரில் கிளம்பினார். காரை உறவினர் பாலா ஓட்டினார்.
பெரம்பலூர் அருகே மங்களமேடு பகுதியில் அதிகாலை 5 மணி அளவில் சென்று கொண்டிருக்கையில் அவர்கள் காருக்கு முன் சென்ற லாரியின் டயர் கழன்றது. அதனால் லாரி தாறுமாறாக ஓடியது. உடனே லாரி டிரைவர் பிரேக் போட்டார். அப்போது பெண் பார்க்கச் சென்றவர்கள் கார் லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது.
இதில் காரில் இருந்த தங்க அமிர்தம், மாரி முத்து, நடராஜன், சுசீலா, பிரேம் ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.
வெங்கடாசலம், பாலா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரையும் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications