தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க முடியாது: உயர் நீதிமன்றம்
சென்னை: சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய கட்சிகளைத் தகுதி நீக்கம் செய்யக் கோரியுள்ள மனுவை தேர்தல் ஆணையம் 6 வார காலத்திற்குள் பரிசீலிக்க வேண்டும் என்று அது உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
சட்டசபை தேர்தலுக்கு முன் தேர்தல் ஆணையம் தமிழகம் முழுவதும் நடத்திய சோதனையில் ரூ. 55 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ஆயிரத்து 700 தேர்தல் விதிமுறை மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் பல இலவச அறிவிப்புகள் வெளியிட்டன. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அதன்பேரில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும். தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது,
சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க முடியாது. எனினும், மனுதாரர் அளித்த மனுவை தேர்தல் ஆணையம் 6 வாரங்களுக்குள் பரிசீலித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications