ஸ்ட்ரைக் வாபஸ் இல்லை; சிறை செல்லவும் தயார்! - விமானிகள் பிடிவாதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை எக்காரணம் கொண்டும் ஸ்ட்ரைக்கை வாபஸ் பெற மாட்டோம், சிறை செல்லவும் தயார் என ஏர் இந்தியா விமானிகள் அறிவித்துள்ளனர்.

ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய வர்த்தக விமானிகள் சங்கத்தைச் சேர்ந்த 800 விமானிகள் கடந்த 26-ந் தேதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். ஊதிய உயர்வு, சரியான வேலை முறை உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தத்தில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இதைத் தொடர்ந்து, வேலை நிறுத்தம் செய்து வரும் சங்கத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. அந்த சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்பட 7 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். நேற்று மேலும் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

நீதிமன்றம் மறுப்பு

இதை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தொழிற்சங்க அங்கீகாரத்தை ரத்து செய்ததற்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதி எஸ்.முரளிதர் உத்தரவிட்டார். விமானிகளின் கோரிக்கை குறித்து, ஜுலை 16-ந் தேதி நடைபெறும் அடுத்த விசாரணையின் போது ஏர் இந்தியா நிறுவனம் தனது பதிலை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

பொதுமக்களின் நலனை முன்னிட்டு, விமானிகள் தங்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு நேற்று முன்தினம் மாலைக்குள் வேலைக்கு திரும்ப வேண்டும் என்று ஏற்கனவே டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி கீதா மிட்டல் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், நீதிபதிகளின் உத்தரவை மதிக்காமல் விமானிகள் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். அத்துடன் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, விமானிகள் நேற்று மாலைக்குள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு, வேலைக்கு திரும்ப வேண்டும் என்று ஏர் இந்தியா நிறுவனம் கெடு விதித்தது. மேலும், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் வேலை நிறுத்தத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் விமானிகள் மீது ஏர் இந்தியா நிறுவனம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு'ம் தொடர்ந்தது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

ஆனால், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி கீதா மிட்டல், வேலை நிறுத்தம் செய்து வரும் விமானிகள் மீது நீதின்ற அவமதிப்பு வழக்கு தொடர தானே நடவடிக்கை எடுத்தார்.

"பொதுமக்கள் நலனைக் கருதி, விமானிகள் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும்'' என்ற தனது உத்தரவை மதிக்காமல், தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து வரும் விமானிகள் மீது, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் வந்த செய்திகளின் அடிப்படையில், தானாக முன் வந்து இந்த நடவடிக்கை எடுப்பதாக அவர் அறிவித்தார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உரிய நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் விசாரிக்க உத்தரவிடும்படி, உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் வழக்கை ஒப்படைப்பதாக நீதிபதி கீதா மிட்டல் அறிவித்தார்.

சங்கத்தின் சொத்துக்கள் பறிமுதல்

விமானிகள் உடனடியாக வேலைக்கு திரும்பாவிட்டால், அவர்கள் சார்ந்துள்ள சங்கத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்படும் என்றும் நீதிபதி கீதா மிட்டல் எச்சரிக்கை விடுத்தார்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு குறித்து தங்களது விளக்கத்தை திங்கட்கிழமை நடைபெறும் அடுத்த கட்ட விசாரணையின்போது நேரில் ஆஜராகி தெரிவிக்கும்படி விமானிகள் சங்க தலைவர் பிந்தர், செயலாளர் ரிஷபக்குமார், மண்டல செயலாளர் அமித்தேஷ் அகுஜா ஆகியோருக்கு நோட்டீசு அனுப்பவும் நீதிபதி கீதா மிட்டல் உத்தரவிட்டார்.

எஸ்மா சட்டம்

இதற்கிடையே 800 விமானிகளும் வேலைக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என்றும் ஏர் இந்தியா எச்சரித்திருந்தது. இதற்கான கெடுவும் நேற்று முடிந்துவிட்டது.

சிறை செல்ல தயார்

ஆனால், தாங்கள் வேலை நிறுத்தத்தை கைவிடப் போவதில்லை என்றும், நீதிமன்றம் தங்களுக்கு தண்டனை வழங்கினால் அதை ஏற்று சிறைக்கு செல்லவும் தயார் என்றும் தடை செய்யப்பட்ட இந்திய வர்த்தக விமானிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரிஷாப் கபூர் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

ஏர் இந்தியா நிறுவனத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதாக அரசு உறுதி அளித்தால் வேலைக்கு திரும்ப தயார் என்றும் அவர் அப்போது அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+