பின்லேடன் வேட்டையாடப்படுவதை லைவ் ட்வீட் செய்த பாக். இளைஞர்
டெல்லி: பின்லேடனை அமெரிக்கப் படையினர் வேட்டையாடுவது குறித்துத் தெரியாமலேயே அதுதொடர்பான சம்பவங்களை லைவாக ட்விட் செய்து, அந்த சமயத்தில் என்ன நடந்தது என்பதை உலகுக்கு வெளிக்காட்டியுள்ளார் பாகிஸ்தானைச் சேர்ந்த ஐடி கன்சல்டன்ட் சோயப் அத்தார் என்ற இளைஞர்.
இவர் லாகூரைச் சேர்ந்தவர். ஓய்வுக்காக அப்போத்தாபாத் வந்து தங்கியிருந்தார். சம்பவத்தன்று நடந்தது குறித்து தொடர்ந்து ட்விட் செய்துள்ளார் அத்தார். ஆனால் அது பின்லேடன் வேட்டை என்பது இவருக்கு தெரியவில்லை என்பதுதான் சுவாரஸ்யமானது.
1ம் தேதி நள்ளிரவில் வழக்கம் போல இவர் ட்வீட் செய்து கொண்டிருந்தார். அப்போது அப்போத்தாபாத் வானில் திடீரென ஹெலிகாப்டர்கள் பறந்தது அவருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ட்வீட் செய்தபோது, திடீரென ஹெலிகாப்டர்கள் பறக்கின்றன. இது வழக்கத்திற்கு விரோதமானது, என்னவென்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து ஹெலிகாப்டர்களின் சத்தம் கேட்டபடி இருந்ததால், சீக்கிரமாகப் போ ஹெலிகாப்டரே என்று நக்கலாகவும் ஒரு ட்வீட் அனுப்பியுள்ளார்.
ஆனால் திடீரென துப்பாக்கிச் சத்தமும், குண்டுச் சத்தமும் கேட்டபோதுதான் அவருக்கு ஏதோ விபரீதமாக நடக்கிறது என்பது புரிந்துள்ளது. பிறகுதான் பின்லேடன் வேட்டையாடப்பட்டது அவருக்குத் தெரிய வந்து அதிர்ந்துள்ளார்.
பின்லேடனை அமெரிக்கப் படையினர் வேட்டையாடியதை தனக்கே தெரியாமல், லைவ் ட்வீட் செய்தபடி இருந்தோம் என்பதை அறிந்து அவர் ஆச்சரியமடைந்துள்ளார். ஒசாமா வேட்டையை எனக்கே தெரியாமல் லைவ் ட்வீட் செய்துள்ளேன் என்பதை அறியும்போது ஆச்சரியமாக உள்ளது என்று தனது ஆச்சரியத்தையும் அவர் ட்வீட் செய்துள்ளார்.
பின்லேடன் வேட்டை குறித்து இவர் லைவ் ட்வீட் செய்த விவகாரம் தெரிய வந்து சில மணி நேரங்களிலேயே இவருக்கு கிட்டத்தட்ட 12,000 ஆதரவாளர்கள் ட்வீட்டரில் கிடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்லேடன் வேட்டையை நேரடியாக ட்விட் செய்தவர் இவரே. இதன் மூலம் ஒரே இரவில் இவர் ஸ்டாராகி விட்டார்.












Click it and Unblock the Notifications