அன்னாவுக்குப் போட்டியாக ஊழலை எதிர்த்து பாபா ராம்தேவ் சாகும்வரை உண்ணாவிரதம்
மும்பை: ஊழலை ஒழிக்கவும், கறுப்பு பணத்தை மீட்கவும் வலியுறுத்தி பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் வரும் ஜூன் மாதம் 4-ம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே இதே விஷயத்துக்காக டெல்லியில் காந்தியவாதி அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் இருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இந்த உண்ணாவிரதத்தின் இறுதியில் ஜன் லோக்பால் சட்ட மசோதா குறித்து பரிசீலிக்க குழு அமைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டது.
இந்த குழுவில் சிவில் சமூகம் சார்பில் பிரபல வழக்கறிஞர்கள் சாந்தி பூஷன், அவரது மகன் பிரஷாந்த் பூஷன் ஆகியோரும் இடம் பெற்றனர். இதற்கு ராம்தேவ் ஆட்சேபனை தெரிவித்து விமர்சித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் அவரும் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
இந்தியாவில் மக்களின் வரிப்பணத்தை ஊழல்வாதிகள் கொள்ளையடிக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ண உள்ளது.
ஆகையால் ஊழலை ஒழிக்க வேண்டும். மேலும், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்து அதை பொது உடைமையாக்க வேண்டும். ஊழல்வாதிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். இந்த 3 கோரிக்கைகளை வலியுறுத்தி நான் வரும் ஜூன் மாதம் 4-ம் தேதி முதல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்.
இந்த கோரிக்கைகளை முன்வைத்து இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, மொரீஷியஸ் உள்ளிட்ட பல நாடுகளில் வசிக்கும் எனது ஆதரவாளர்களும் உண்ணாவிரதம் இருப்பார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications