Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீதிமன்றத்தில் என் இளைய மகள்..எனது எண்ணங்கள் எல்லாம் ஜனாதிபதி மாளிகையில்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனாதிபதி மாளிகையில் தமிழறிஞர்கள் முதல்முறையாகச் சென்று, விருதுகள் பெறும் நிகழ்ச்சியை எண்ணி, குவலயத் தமிழர்கள் அனைவருமே வாழ்த்துகிறார்கள்! நீண்டநாள் கனவு நிறைவேறுகிறது! என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், டெல்லி நீதிமன்றத்தில் என் இளைய மகள் கனிமொழி நிறுத்தப்பட்டுள்ள இந்த நேரத்தில், இதை எழுதுகிறேன்.

புலவர்களின் செந்நாவில் புரண்டு, புயலாகவும், பூந்தென்றலாகவும், புறப்பட்ட தமிழ்- மூவேந்தர்களாம் சேர, சோழ, பாண்டியர்களின் அரண்மனையில் எதிரொலித்த இனிய தமிழ்- சங்கம் வளர்த்துச் சங்கநாதம் செய்த தமிழ்- வேங்கடம் முதல் குமரி வரை விதை களைத் தூவி, வியப்புறு தருக்களை வளர்த்த தமிழ்- மலை தாண்டி, கடல் தாண்டி, மண்ணுலகின் முதன்மை மொழி என வலம் வந்த தமிழ்- மாளிகைகளில் மட்டுமே மணம் வீசிக்கொண்டிருந்த நிலையினை மாற்றி, அறிஞர் அண்ணாவால், மண் குடிசைகளுக்கெல்லாம் கொண்டு செல்லப்பட்டு; குன்றிலிட்ட விளக்காய் வெளிச்சக் கதிர் பரப்பிய தமிழ்-எழுத்து, சொல், பொருள் என மூன்றிலும், மற்றெம்மொழியையும் விஞ்சி நிற்கும் தமிழ்- இன்றைக்கு (6.5.2011) டெல்லி மாநகரில், ராஷ்டிரபதி பவன்' எனப்படும் ஜனாதிபதி மாளிகைக்குள், ராஜ உபசாரத்தோடு' கம்பீரமாய் நுழைகிறது. ஆம்; மத்திய அரசின் சார்பில், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கிடும் செம்மொழி விருதுகளைப் பெறுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நமது தமிழ் அறிஞர்கள், டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சோனியா காந்தியாவின் வழிகாட்டுதலிலும், டாக்டர் மன்மோகன் சிங்கின் தலைமையிலும் இயங்கிவரும் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, கழகம் தொடர்ந்து வலியுறுத்தியதால், 12.10.2004 அன்று, தமிழைச் செம்மொழி எனப் பிரகடனம் செய்து, அறிவிக்கை வெளியிட்டது. அதனையொட்டி- இதுவரை சமஸ்கிருதம், பாலி, ப்ராக்ருதம், அராபிக், பாரசீகம் ஆகிய மொழிகளில் விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிஞர்கள் மட்டுமே; ஜனாதிபதி மாளிகைக்கு அழைக்கப்பட்டு, குடியரசுத் தலைவரால் கவுரவிக்கப்பட்டு வந்த பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக; முதல்முறையாக, நேற்று காலை 11.30 மணிக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில், நமது தமிழறிஞர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழர்களின் செவிகளில் இன்பத்தேனாகப் பாய்ந்து கொண்டிருக்கிறது.

நமது இடையறாத முயற்சிகளின் காரணமாக, தமிழ் செம்மொழி' என்று மத்திய அரசால் பிரகடனப்படுத்தப்பட்டதற்குப் பிறகு, நமது வேண்டுகோளை ஏற்று, மறைந்த எனது நண்பர் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி அர்ஜூன் சிங் மத்திய அரசின் சார்பில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வாயிலாக, ஆண்டுதோறும், 5 லட்சம் ரூபாய் சிறப்புப் பரிசுடன் "தொல்காப்பியர் விருது'', 5 லட்சம் ரூபாய் சிறப்புப் பரிசுடன் "குறள்பீட விருது'', ஒரு லட்சம் ரூபாய் சிறப்புப் பரிசுடன் ஐந்து "இளம் அறிஞர் விருதுகள்'' ஆகியவற்றை வழங்குவதற்கு முன்வந்தார்.

அதனையொட்டி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில், எனது தலைமையில், இந்த விருதுகளுக்குரிய அறிஞர் பெருமக்களைத் தேர்ந்தெடுப்பதற்காக முனைவர் வா.செ. குழந்தைசாமி, முனைவர் மா.நன்னன், எழுத்தாளர்- நண்பர் ஜெயகாந்தன் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு; 2005-2006ம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் 2005-2006, 2006-2007, 2007-2008 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன.

2005-2006ம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது'- 100 வயதைக் கடந்தவரும், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், மயிலம் தமிழ்க் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றத் தொடங்கி, சென்னைப் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றி, தமிழ் மொழிக்கு அருந்தொண்டு புரிந்தவரும்; செம்மொழித் தமிழ் குறித்து 100க்கும் மேலான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டவரும்; 65 நூல்களை எழுதியவரும்; பல்வேறு நிறுவனங்களின் பரிசுகளையும், விருதுகளையும் பெற்றவருமான பேராசிரியர் அடிகளாசிரியருக்கு வழங்கப்படுகிறது.

பேராசிரியர் அடிகளாசிரியர், தொல்காப்பியர் விருதைப்' பெற்றுக்கொள்வதற்கு, சென்னையிலிருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா' விமானத்தில் சென்றிருக்கிறார். அவரது வாழ்நாளிலேயே இதுதான் முதல் விமானப் பயணம். அவரையும், மற்ற தமிழறிஞர்களையும் சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா' நிறுவனத்தின் துணைப் பொதுமேலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், முதுநிலை மேலாளர் எம்.பி.மேனன் ஆகியோர் வழியனுப்பி வைத்திருக்கின்றனர்.

2006-2007ம் ஆண்டுக்கான குறள்பீடம் விருது'- அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவரும்; கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பல்லாண்டுக் காலம் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்த வரும்; தமிழ் மற்றும் வடமொழி ஆகிய இரு மொழி இலக்கியங்களையும் முறையாகக் கற்றுத் தேர்ந்தவரும்; ஐரோப்பியச் செம்மொழிகளான லத்தீனம், கிரேக்கம் ஆகிய இருமொழி இலக்கியங்களையும் விரிவாகக் கற்றுத் தேர்ந்த வரும்; தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளின் இலக்கியங்களை மூல மொழியிலேயே விரிவாகக் கற்றவருமான பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட்டுக்கு வழங்கப்படுகிறது. ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் இன்றைய நிகழ்ச்சியில், உடல்நிலை காரணமாக அவர் கலந்துகொள்ள இயலவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2005-2006ம் ஆண்டுக்கான இளம் அறிஞர் விருதுகள்'; விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆர்.அரவிந்தன், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் ஒய்.மணி கண்டன், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் எஸ்.கலைமகள், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் வா.மு.சே.முத்துராமலிங்க ஆண்டவர், புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் கே.பழனிவேலு ஆகியோர்க்கும்;

2006-2007-ம் ஆண்டுக்கான இளம் அறிஞர் விருதுகள்'; மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் எஸ்.சந்திரா, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் அரங்க.பாரி, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் மு.இளங்கோவன், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் எம்.பவானி, நாகை மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் ஆர்.கலைவாணி ஆகியோர்க்கும்; 2007-2008-ம் ஆண்டுக்கான இளம் அறிஞர் விருதுகள்'; திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் ஏ.செல்வராசு, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் பி.வேல்முருகன், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் ஏ.மணவழகன், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் எஸ்.சந்திரசேகரன், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் எஸ்.சைமன் ஜான் ஆகியோர்க்கும்; இன்று ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்படுகின்றன.

தமிழ் உலகம் நீண்ட நெடுங்காலமாகவே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த செம்மொழி விருதுகள்'' வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. நிகழ்ச்சி நடைபெறும் இந்த நாளில்; எனது நினைவுகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் தோன்றி பளிச்சிடுகின்றன.

முதன்முதலில் தமிழுக்குச் செம்மொழித் தகுதி கோரியவர் சூரியநாராயண சாஸ்திரியார் எனும் பரிதிமாற் கலைஞர் ஆவார். தமிழ் செம்மொழி என்பது திண்ணம். இதுபற்றி யன்றே தொன்று தொட்டுத் தமிழ் மொழி செந்தமிழ் என நல்லிசைப் புலவரால் நவின்றோதப் பெறுவதாயிற்று. ஆகவே தென்னாட்டின்கட் சிறந் தொளிராநின்ற அமிழ்தினுமினிய தமிழ் மொழி எவ்வாற்றான் ஆராய்ந்த வழியும், உயர் தனிச் செம்மொழியேயாம் என்பது நிச்சயம்'' என்று தமிழ் மொழியின் வரலாறு' என்ற தமது நூலில், 100 ஆண்டுகளுக்கு முன்பே அறுதியிட்டு உறுதியாகச் சொன்னவர் பரிதிமாற் கலைஞர்.

மதுரை- விளாச்சேரியில் பரிதிமாற் கலைஞர் வாழ்ந்த இல்லம் கழக ஆட்சியில் அரசுடைமையாக்கப்பட்டு; 8 லட்சம் ரூபாய்ச் செலவில் புதுப்பிக்கப்பட்டு; இல்லத்தின் முகப்பில் அவரது மார்பளவுச் சிலை நிறுவப்பட்டு; 31.10.2007 அன்று என்னால் திறந்து வைக்கப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் புத்தகத்தில், தமிழுக்குச் செம்மொழித் தகுதி கோரி குரல் கொடுத்த முதல் தமிழன் பரிதிமாற் கலைஞர் புகழ் வாழ்க!'' என நான் எழுதிக் கையெழுத்திட்டேன்.

தமிழ் மொழி செம்மொழி' என முதல் குரல் கொடுத்த தமிழர் பரிதிமாற்கலைஞர் என்றால்; தமிழ் மொழி செம்மொழி' என்று முதலில் சொன்ன வெளிநாட்டவர் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் ஆவார். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்'' என்ற உயர் பெரும் நூலில் அறிஞர் கால்டுவெல், திராவிட மொழிகள் அனைத்திலும், உயர் தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களை அறவே ஒழித்துவிட்டு உயிர் வாழ்வதோடு, அவற்றின் துணையை ஒருசிறிதும் வேண்டாமல் வளம் பெற்று வளர்வதும் இயலும்'' என்று நிறுவிக் காட்டி இருக்கிறார். அந்த சிறப்புக்குரிய ராபர்ட் கால்டுவெல் தமிழகத்தில், நெல்லை மாவட்டத்தில், இடையன் குடியில் வாழ்ந்த இல்லம், 20 லட்சம் ரூபாய்ச் செலவில் அரசுடைமையாக்கப்பட்டு; புதுப்பிக்கப்பட்டு, அவரது சிலை அங்கே நிறுவப்பட்டு; அந்த நினைவில்லத்தையும், சிலையினையும் 17.2.2011 அன்று சென்னையில் இருந்து காணொலிக் காட்சி' வாயிலாகத் திறந்து வைத்தேன்.

அந்த நிகழ்ச்சியில் நான், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், சிறப்புக்கும் கிறித்தவ அறிஞர்கள் ஆற்றியிருக்கும் அரிய பணியை இந்த இனிய வேளையில் நினைவு கூர்வது எனது கடமையாகும்'' என்று சுட்டிக்காட்டி; தமிழ் மொழியைப் பொறுத்தவரை, கிறித்தவர்கள் ஆற்றிய பணி பலவகைப்பட்டதாகும். தமிழ்நாட்டுக் கலைச் செல்வத்தை மேலை நாட்டினர்க்குக் காட்டினர் சிலர். தமிழ் இலக்கியத்தின் பண்புகளைப் பாட்டாலும், உரையாலும் விளக்கியருளினர் சிலர். இலக்கண வாயிலாக ஆராய்ந்து, தமிழின் தொன்மையையும், செம்மையையும் துலக்கினர் சிலர். மேலைநாட்டு முறையில் தமிழ் அகராதி யைத் தொகுத்து உதவினர் சிலர். தெள்ளுதமிழ் வசன நடையில் அறிவு நூல் இயற்றித் தொண்டாற்றினர் சிலர்'' என்று சொல்லின் செல்வர் பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை குறிப்பிட்டுள்ளதை எடுத்துக்காட்டி உரையாற்றினேன்.

மைசூரில் இயங்கி வந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தைக் கழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி, சென்னைக்கு மாற்றிய மைத்தது. நல்லெண்ணத்தின் அடிப்படையிலும், நம் மீதும், நமது மொழியின் மீதும் கொண்ட பற்றின் காரணமாகவும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் முன்னாள் மந்திரி அர்ஜுன் சிங், செம்மொழி நிறுவனத்தைச் சென்னைக்கு மாற்றியமைத்ததற்காக, அவருக்கு சென்னையில் 18.8.2007 அன்று தமிழக அரசின் சார்பில், என் தலைமையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

சென்னை காமராசர் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித் துறையின் பாலாறு இல்லத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அலுவலகத் திறப்பு விழா 30.6.2008 அன்று நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்று; அலுவலகத்தைத் திறந்து வைத்து நான் உரையாற்றியபோது, "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தமிழகத்தில் காலூன்றுகின்ற நாள், பரிதிமாற்கலைஞர் 150 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட கனவு-அந்தக் கனவு நனவாக வேண்டுமென்று 50 ஆண்டுகளுக்கு முன்பே நான் கொண்ட நினைவு இன்று செயலாக்கம் பெறுகின்றது. இதையொட்டி எனக்கென்று உள்ள சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாயை-இந்த நிறுவனத்தின் பொறுப்பில்- கலைஞர் கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை' ஒன்றினை நிறுவிட வழங்குகின்றேன். இந்த ஒரு கோடி ரூபாயிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு, தமிழக வரலாற்றுப் பயன்மிக்க கல்வெட்டுகளை ஆய்வு செய்பவர்களுக்கு அறக்கட்டளையின் சார்பில் விருதுகளும், பொற்கிழிகளும் வழங்கப்படும்'' என்று நான் அறிவித்து; அதன்படி, 2009-ம் ஆண்டுக்கான முதல் விருது - கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது''- பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலாவுக்கு; கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 10 லட்ச ரூபாய் பொற்கிழி, மதிப்புச் சான்றிதழ், நினைவுப் பரிசு ஆகியவை, இந்திய ஜனாதிபதியால் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன.

2006-2007ம் ஆண்டுக்கான குறள்பீடம் விருது'க்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்க நாட்டுப் பேராசிரியர் முனைவர் ஜார்ஜ் எல்.ஹார்ட் என்மீது அளவிடற்கரிய அன்பும், ஆழமான நட்பும் பாராட்டுபவர். அவரது பெயரைக் கேட்கும்போதெல்லாம்; கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை'' உருவாக்கப்பட்டதன் 10-வது ஆண்டு விழாவின்போது வெளியிடப்பட்ட; எனது இலக்கியப் படைப்புகள் அடங்கிய கலைஞர் களஞ்சியம்' என்னும் நூலுக்கு அவர் வழங்கிய முன்னுரையில், கலைஞர் புதினம், கட்டுரைகள், திரைக்கதைகள், சிறுகதைகள், வரலாற்றுப் புதினங்கள், அறிஞர்கள் கூறும் கருத்துகள் எனப் பலவிதங்களில் இலக்கியப் படைப்புகளை அளித்துள்ளார். தமிழர்களிடம் அவர்களின் பழம் பெருமையைச் சிறந்த முறையில் உணர்த்தியிருப்பவர் கலைஞர். கலைஞர் இலக்கியத்திலும், அரசியலிலும் ஆழ்ந்த அறிவுடையவர். அவர் வாழ்நாள் முழுவதும் தமிழ்மொழி, தமிழர் வாழ்வின் உயர்வுக்காகப் பாடுபட்டுள்ளார்'' என்று குறிப்பிட்டுள்ளதை என்னால் மறந்திட இயலாது.

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முன்னர் சட்டப்பேரவை நடைபெற்று வந்த மன்றத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலக''த்தை மாற்றி அமைப்பதென்று கழக அரசு முடிவு செய்ததையொட்டி; அந்த நூலகம் 2.6.2010 முதல், ஆய்வுக்குப் பயன்படும் பல்லாயிரக்கணக்கான நூல்களுடன், வெகு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

இப்படி இன்னும் எத்தனையோ நினைவுகள், இன்று ஒவ்வொன்றாக வந்து என் இதயத்தை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் எடுத்துச் சொல்ல காலமும், இடமும் தான் போதவில்லை. எனது எண்ணங்கள் எல்லாம் ஜனாதிபதி மாளிகையில் குழுமியுள்ள தமிழறிஞர்களைத்தான் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. அவர்கள் அனைவரையும் இங்கிருந்தவாறே மனமார வாழ்த்தி மகிழ்கின்றேன்! ஜனாதிபதி மாளிகையில் தமிழறிஞர்கள் முதல்முறையாகச் சென்று, விருதுகள் பெறும் நிகழ்ச்சியை எண்ணி, குவலயத் தமிழர்கள் அனைவருமே வாழ்த்துகிறார்கள்! நீண்டநாள் கனவு நிறைவேறுகிறது!

இந்நாள் உலகத் தமிழர் அனைவர்க்கும் பொன்னாள்தானே! என்று கூறியுள்ளார் முதல்வர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+