பொதுக்கணக்கு குழு தலைவராக இருக்க முரளி மனோகர் ஜோஷிக்கு தகுதியில்லை: நாராயணசாமி
புதுச்சேரி: பொதுக்கணக்கு குழு தலைவராக இருக்க முரளி மனோகர் ஜோஷிக்கு தகுதியில்லை என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
2ஜி விவகாரத்தில் நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி அளித்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த அறிக்கையை குப்பைத் தொட்டியில் தான் போடவேண்டும்.
அந்த அறிக்கையைத் முரளி மனோகர் ஜோஷி, பாஜகவின் ஏஜென்டாக தயாரித்துள்ளார்.
பொதுக்கணக்கு குழுவில் தற்போதுள்ள 21 உறுப்பினர்களில் காங்கிரஸ், திமுக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி உள்ளிட்ட 11 உறுப்பினர்கள் ஜோஷி தயாரித்த வரைவு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளளனர். இந்நிலையில், அந்த அறிக்கையை சபாநாயகரிடம் முரளி மனோகர் ஜோஷி கொடுத்தது தவறு.
பொதுக்கணக்கு குழுவின் அறிக்கைகளை வெளியில் தெரிவிக்கக் கூடாது என்ற விதிகளை மீறி அவர் செயல்பட்டுள்ளார். எனவே, பொதுக்கணக்கு குழு தலைவராக இருக்க அவருக்கு தகுதியில்லை.
அவர் பல மாநிலங்களுக்கு சென்று பிரதமருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை அகற்றும் வகையிலும் பேசி வருகிறார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விருது முரளி மனோகர் ஜோஷிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை சபாநாயகர் திரும்பப் பெற வேண்டும்.
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய கர்நாடக முதல்வர் எதியூரப்பா மீது நடவடிக்கை எடுக்க தெம்பு இல்லாத பாஜக ஊழல் குறித்து பேசாமல் இருப்பது நல்லது என்றார்.












Click it and Unblock the Notifications