ஆந்திர எம்.எல்.ஏ.வை அடித்து விரட்டிய மலைவாழ் பெண்கள்
ஹைதராபாத்: தங்களது எதிர்ப்புகளையும் மீறி சுரங்கம் தோண்ட அனுமதி அளித்ததால் ஆத்திரமடைந்த மலைவாழ் மக்கள் ஆந்திர மாநில தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏவை அடித்து விரட்டிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திர மாநிலம் அரக்கு தொகுதி சட்டசபை உறுப்பினர் சிவேரு சோமா. இவர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். இத்தொகுதிக்குட்பட்ட சயாரி கிராமத்தில் சைனா களிமண் சுரங்கம் தோண்ட அனுமதி தரப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பணிகளுக்கான காண்டிராக்ட் ஒரு பெண்ணுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சுரங்கத்திற்கு இப்பகுதி மலை வாழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்தவும், அமைதிப்படுத்துவதற்காகவும் அங்கு ஒரு சமாதானக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில் சோமா கலந்து கொண்டார்.
அப்போது மலைவாழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் பதட்டமான நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கூட்டம் ரத்து செய்யப்பட்டது. சோமா அங்கிருந்து வேகமாக கிளம்பினார்.
ஆனால் அவரை மலை வாழ் மக்கள், குறிப்பாக பெண்கள் முற்றுகையிட்டு அடிக்க ஆரம்பித்தனர். அவரை கீழே தள்ளி விட்டனர். இதனால் அவர் வேகமாக தனது காரை நோக்கி நடக்க ஆரம்பித்தார். ஆனாலும் விடாத பெண்கள் அவரை தலை, தோள்பட்டை, முதுகு ஆகியவற்றில் தாங்கள் வைத்திருந்த நீண்ட கம்புகளாலும், கையாலும் குத்தி தள்ளி விரட்டினர்.
இதையடுத்து எம்.எல்.ஏவுடன் வந்திருந்த அவரது ஆதரவாளர்கள் சோமாவை பத்திரமாக காருக்குக் கூட்டிச் செல்ல முயன்றனர். அப்போது அவர்களையும் பெண்கள் தாக்கினர். கார்களையும் தாக்கி கண்ணாடிகளை உடைத்தனர்.
இதையடுத்து தப்பித்தோம், பிழைத்தோம் என்று எம்.எல்.ஏவும், அவருடன் வந்தவர்களும் அங்கிருந்து ஓடி உயிர் தப்பினர்.












Click it and Unblock the Notifications