தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள்

இதுகுறித்து பின்லேடனின் மகன்கள் இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது...
எங்களது தந்தையை அமெரிக்கப் படையினர் கொன்றுள்ள செயல் மிகவும் அத்துமீறிய, காட்டுமிராண்டித்தனமான செயலாகும். அவரது உடலை கடலில் வீசியதும் கண்டனத்துக்குரியத.
ஏன் எங்களது தந்தையை கைது செய்ய அமெரிக்கப் படையினர் முயலவில்லை. அவரை கோர்ட்டில் நிறுத்தி விசாரணைக்கு உட்படுத்தவில்லை என்பதை அமெரிக்கா விளக்க வேண்டும்.
எங்களது தந்தையின் மரணப் பின்னணி குறித்து ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும். அடிப்படை மனித உரிமைகள், சட்ட நெறிமுறைகளைக் கூட அமெரிக்கா கடைப்பிடிக்கவில்லை. ஆயுதமே இல்லாத ஒரு நிரபராதியை காட்டுமிராண்டித்தனமாக சுட்டுக் கொன்றுள்ளது அமெரிக்கா. அவரது உடலை கடலில் வீசிய செயலும் நியாயமே இல்லாதது.
அரசியல் பிரச்சினைகளுக்கு இப்படிப்பட்ட படுகொலைகள் தீர்வல்ல. எங்களது தந்தையின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கோருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் அபோத்தாபாத்தில் பதுங்கியிருந்த பின்லேடனை அதிரடியாக கொன்ற அமெரிக்கப் படையினர் உடலை கடலில் வீசி விட்டனர். பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட படங்களையும் அவர்கள் இதுவரை வெளியிடவில்லை. அவை மிகவும் கோரமாக இருப்பதால் வெளியிட்டால் பிரச்சினை வரும் என்று அமெரிக்கா காரணம் கூறியுள்ளது. இதனால் பின்லேடன் வேட்டையாடப்பட்ட விதம் பெரும் மர்மமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் இதுகுறித்து ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும் என்று பின்லேடனின் மகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications