ராகுல் காந்தி அருகே துப்பாக்கியுடன் நின்ற இளைஞர் கைது
டெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அருகே துப்பாக்கியுடன் காணப்பட்ட நபரைப் போலீஸார் கைது செய்தனர்.
உ.பி. மாநிலம் பச்சா-பரசுல் பகுதியில், விவசாயிகள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களிடமிருந்து எடுக்கப்படும் நிலங்களுக்கு கூடுதல் நிவாரணத் தொகையைக் கோரி அவர்கள் போராடி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் நேற்று ராகுல் காந்தி திடீரென கலந்து கொண்டார். அவரை உ.பி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் நள்ளிரவில் ராகுல் விடுதலை செய்யப்பட்டார்.
முன்னதாக பாதுகாப்பு வளையத்தை உதறி விட்டு ராகுல் காந்தி போராட்டம் நடந்த இடத்திற்குச் சென்றதால் உ.பி. போலீஸார் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் ராஜீவ் காந்தி இருந்த இடத்திற்கு அருகே நின்றிருந்த ஒரு நபரிடம் நாட்டுத் துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவரைப் போலீஸார் கைது செய்தனர்.
அவர் ஏன் து்பபாக்கியுடன் வந்தார் என்பது தெரியவில்லை. அவரை காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் விசாரித்தனர். பின்னர் அவரை ராகுல் காந்தியின் சிறப்புப் பாதுகாப்புப் படையிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.
ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, பாஸ்வான் கைது
இதற்கிடையே, விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர்.
இந்த விவசாயிகள் போராட்டம் தற்போது அரசியல் லாபம் காணும் போராட்டமாக அரசியல்வாதிகளால் மாற்றப்பட்டு விட்டது. விவசாயிகளுக்கு ஆதரவு என்ற பெயரில் ஒவ்வொரு கட்சியும் போட்டி போட்டு விவசாயிகளின் மனதைக் கவரும் வகையில் போராட்டங்களில் குதித்துள்ளனர்.
அதன்படி இன்று காஸியாபாத்தில் உண்ணாவிரதம் இருந்த ராஜ்நாத் சிங், எம்.பி. அருண் ஜெட்லி, முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர்.
அதேபோல ராம் விலாஸ் பாஸ்வானும் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications