இளம் தாய்மார்களுக்கு மருந்துக்குப் பதில் பினாயில் தந்த மருத்துவமனை!
அமராவதி: மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், குழந்தைப் பெற்றுக் கொண்ட பெண்களுக்கு மருந்துக்குப் பதில் பினாயிலைக் கொடுத்த அவலம் நடந்துள்ளது.
மொத்தம் 7 பெண்களுக்கு இதுபோல மருந்துக்குப் பதிலாக அங்குள்ள ஊழியர் பினாயிலை மாற்றிக் கொடுத்து விட்டார்.
மருத்துவமனையின் 6வது வார்டில் இந்த பெண்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கலுக்கு நேற்று மாலை பினாயில் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு வாந்தி ஏற்பட்டு வயிற்று வலி அதிகரித்தது.
சமீபத்தில்தான் இந்தப் பெண்களுக்கு பிரசவம் நடந்தது. விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படவிருந்தனர். இந்த நிலையில் இப்படி ஒரு செயலைச் செய்துள்ளார் அந்த ஊழியர்.
வைஷாலி வசுலே என்ற நோயாளி, தனக்குக் கொடுக்கப்பட்ட மருந்து பினாயில் வாடையில் இருப்பதை உணர்ந்து, கூறிய பிறகுதான் உண்மை தெரிய வந்தது.
இதையடுத்து வைஷாலியின் உறவினர்கள் காட்கே நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
பினாயில் கொடுக்கப்பட்ட ஏழு பெண்களும் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாகவும், நலமுடன் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications