வாகன எண்களை வைத்து நடக்கும் சூதாட்டம்-கலகலக்கும் வெள்ளக்கோவில்
வெள்ளகோவில்: வெள்ளகோவிலில் ரோட்டில் செல்லும் நான்கு சக்கர வாகனங்களின் எண்களை குறித்து வைத்து, "ஜாக்பாட்' என்ற பெயரில் சூதாட்டம் நடத்தப்படுகிறது.
ரோடு ஜாக்பாட்
வாகனப் போக்குவரத்து அதிகம் இருக்கும் வெள்ளகோவில் - முத்தூர் மெயின் ரோடு, புது பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் நான்கு முதல் ஒன்பது பேர் வரை பேப்பர், பேனாவுடன் ஆஜராகிறார்கள். ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களில் ஆளுக்கொரு எண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர்.
ரோட்டில் செல்லும் நான்கு சக்கர வாகனங்களின் கடைசி இரு எண்களை, கூட்டத்தில் ஒருவர் பேப்பரில் குறித்துக்கொள்கிறார். 50 வாகனங்கள் சென்றதும், தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள எண்களோடு, குறித்து வைத்துள்ள வாகனங்களின் கடைசி இரண்டு இலக்க எண்ணை ஒப்பிட்டு பார்க்கின்றனர். யாருடைய எண் கொண்ட வாகனம் அதிகபட்சம் வந்துள்ளதோ, அவருக்கு மற்றவர்கள் பந்தய பணத்தை கொடுத்து விடுகின்றனர்.
இந்த அபாரமான சூதாட்டத்திற்கு இந்த மேதாவிகள் வைத்திருக்கும் பெயர் 'ரோடு ஜாக்பாட்". ஒரு ரவுண்டுக்கு ரூ.50 முதல் 300 வரை பந்தயத்தொகை நிர்ணயிக்கப்படுகிறது.
அடிதடியில் முடியும் சூதாட்டம்
மூணு சீட்டு, ரம்மி போலவே இந்த நூதன சூதாட்டமும் பெரும்பாலும் அடிதடியில்தான் முடிவு பெறும். வெற்றி பெற்ற நபர், ஆட்டத்தில் இருந்து நழுவ முயற்சித்தால் வலுக்கட்டாயமாக பிடித்து தொடர்ந்து ஆட வைக்கின்றனர்.
பணம் திவாலாகி விட்டால், மொபைல் போன், மோதிரம், ஆர்.சி புத்தகம், தங்கச் செயின்களை அடமானம் வைத்து விளையாடச் செய்கின்றனர். பணம் தீர்ந்து, பொருட்களை வைத்து ஆட விரும்பாமல் மறுக்கும்போதும், வெற்றி பெற்று கிடைத்தது போதும் என்று கிளம்பினாலும், மீதமுள்ள அனைவரும் சேர்ந்து அந்நபரை நையப்புடைப்பர்.
அழகான கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை
இந்த சூதாட்ட கோஷ்டியின் அடிதடி தகராறுகள் சாலையில் பயணிப்பவர்களையும் பாதிப்படையச் செய்கிறது. ஒருவருக்கொருவர் அழகான கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்வது, செருப்பு மற்றும் கற்களை வீசி ஏறிவது, கட்டிப்பிடித்து உருளுவது என இந்த கண்கொள்ளாத காட்சியை தினமும் காண முடிவதாக பொதுமக்கள் வருத்தப்படுகிறார்கள்.
இந்த கோஷ்டிகளை காவல்துறை 'தக்க" முறையில் கவனிக்க வேண்டும் என்பதே வெள்ளக்கோவில் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications