சிவில் சர்வீஸ் தேர்வில் சாதனை-தமிழகத்திலிருந்து 98 பேர் தேர்வு
சென்னை: இதுவரை இல்லாத அளவுக்கு, அதுவும் மிக நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழகத்திலிருந்து சிவில் சர்வீஸ் தேர்வில் 98 பேர் தேர்வாகி புதிய சாதனை படைத்துள்ளனர்.
தமிழகம் நிறையவே மாறியுள்ளது. அது நிறையப் பேருக்குத் தெரிவதில்லை. வெட்டிப் பேசிப் பொழுதைக் கழித்துத் திரிந்த இளைஞர் கூட்டம் எல்லாம் இன்று நிறைய கிடையாது. ஆங்காங்கு இருக்கலாம். ஆனால் நகரங்களில் நடமாடிக் கொண்டிருக்கும் இளைஞர்களை 'ரேண்டமாக' பிடித்து நிறுத்தி உங்களது ஆசை, லட்சியம் என்ன என்று கேட்டால், ஐஏஎஸ் ஆவது என்பதாகத்தான் இருக்கிறது.
அந்த அளவுக்கு லட்சிய வீரர்கள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறி நிறைய காலமாகி விட்டது. சென்னையில் இன்று ஏகப்பட்ட ஐஏஎஸ் பயிற்சி மையங்கள் பெருகி விட்டன. வீடு பிடித்துத் தங்கி, தவம் போல ஐஏஎஸ் கனவை வளர்த்து உருகிக் கொண்டிருக்கும் இளைஞர் கூட்டம் நிறைய.
ஒரு முறை, இரு முறை, இந்த முறை, அந்த முறை என விடா முயற்சியோடு தங்களது லட்சியத்திற்காக மூளை வியர்க்க விறுவிறுக்க படித்துத் தயாராகிக் கொண்டிருக்கும் கூட்டம் அதிகம். அப்படிப்பட்ட லட்சியக் கூட்டத்திலிருந்துதான் 2010ம் ஆண்டு 98 பேர் சிவில் சர்வீஸ் தேர்வில் பாஸாகி தமிழகத்திற்கும், தங்களுக்கும் பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளனர்.
2010ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாகப் போகும் 920 பேரில் பத்து சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது நிச்சயம் சந்தோஷமான விஷயம்.
ஆனால் தமிழகம் அகில இந்தியாவுக்கும் அதிகாரிகளை அள்ளிக் கொடுக்கப் போகும் மாநிலம் என்ற உண்மை தெரியாமல் இருப்பவர்களுக்குத்தான் இது ஆச்சரியம்.
ஆண்டுக்கு ஆண்டு தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் வேட்கையோடு கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வெளியே வருவோரின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்து வருகிறது. அதேபோல கடுமையான முயற்சிகளிலும் இவர்கள் இறங்குவதால் தேர்ச்சி விகிதமும் கூட உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலை நீடித்தால் வருங்காலத்தில் அகில இந்தியாவுக்கும் அதிகாரிகளை வாரி வழங்கும் உற்பத்திக் களமாக தமிழகம் உயரக் கூடிய வாய்ப்புகளை மறுப்பதில்லை என்கிறார்கள் இத்துறையை அறிந்தவர்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சிகளை சிறந்த முறையிலும், தரமுடனும் தரும் ஒரு நிறுவனம் சைதை துரைசாமியின் பயிற்சி மையம்தான்.
இதுகுறித்து சைதை துரைசாமி கூறுகையில், நாங்கள் மனித நேயம் அகாடமியை 2004ல் தொடங்கினோம். அப்போது 1000 பேர் விண்ணப்பித்தனர். ஆனால் இந்த ஆண்டு 40,000 விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளன. எங்களது மையத்தில் அனைத்தும் இலவசம் என்பது முக்கியமானது என்கிறார்.
சமீப காலம் வரை டெல்லிதான் ஐஏஎஸ் பயிற்சிக்கான சிறந்த களமாக அனைவராலும் கருதப்பட்டு வந்தது. ஆனால் இன்று தமிழகத்திலேயே அத்தனை பயிற்சிகளும் தரமானதாக கிடைக்க ஆரம்பித்திருப்பதால் நிறையப் பேர் டெல்லி செல்லாமல் சென்னையிலேயே தரமான பயிற்சியைப் பெற முடிகிறது.
மேலும் பிற மாநிலங்களை விட தமிழகம்தான் தேர்ச்சி விகிதத்திலும் ஆண்டுக்கு ஆண்டு மெருகேறி வருகிறது. கடந்த 2005ம் ஆண்டிலிருந்து தமிழகத்திலிருந்து சிவில் சர்வீஸ் பணிகளில் சேர்ந்துள்ளோரின் எண்ணிக்கை 11 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உ.பி., பீகாரிலிருந்து அதிக அளவில் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெறுவது வழக்கம். தற்போது தமிழகமும் இந்த இடத்தை எட்டிப் பிடித்துள்ளது. இதற்கெல்லாம் மிக முக்கியக் காரணமே வி.பி.சிங் அரசின்போது அமல்படுத்தப்பட்ட மண்டல் கமிஷன் அறிக்கைதான். அதுதான் இன்று பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மிகப் பெரிய பூஸ்ட் ஆக அமைந்து எலைட் பிரிவினரின் துறையாக இருந்து வந்த அதிகார வர்க்க கோட்டைக்குள் சாதாரண கருப்பசாமிகளையும், கந்தசாமிகளையும், கருப்பாயிகளையும் உள்ளே நுழைய அனுமதித்துள்ளது. நிச்சயம் மண்டல் கமிஷனுக்கு நாம் ஒரு ராயல் சல்யூட்டே வைக்கலாம்.
தமிழகத்திலேயே இன்று சென்னையில் தான் ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அதிக அளவில் உள்ளன. பெரும்பாலானவை தரமான, சிறப்பான பயிற்சிகளைத் தருகின்றன. இதில் எங்காவது தவறுகளும் இருக்கலாம். இருப்பினும் பெரும்பாலானவை நல்ல பயிற்சியைத் தருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications