அதிமுக 'லீடிங்' வந்தால் சென்னையில் ஏசி பஸ்களை நிறுத்த உத்தரவு
சென்னை: வாக்கு எண்ணிக்கையின்போது அதிமுக அதிக இடங்களில் முன்னணியில் இருப்பதாக செய்திகள் வெளியானால் சென்னை நகரில் ஓடும் ஏசி டவுன் பஸ்களை நிறுத்தி விடுமாறு போக்குவரத்துக் கழகத்திற்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இதையடுத்து பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் மேற்கொண்டுள்ளது.
டிவி பெட்டிகள் அகற்றம்!
அதேபோல சென்னை மாநகர போக்குவரத்துக் கழகமும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதன்படி மாநகரில் உள்ள போக்குவரத்துக் கழக டிப்போக்களில் ஊழியர்களுக்காக வைக்கப்பட்டுள்ள டிவி பெட்டிகள் அகற்றப்பட்டு விட்டன. கேன்டீன், ஊழியர்கள் பணியாற்றும் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள டிவிகள் எடுக்கப்பட்டுள்ளன. முன்னணி மற்றும் வெற்றி நிலவரத்தைப் பார்த்து திமுக, அதிமுக ஊழியர்களிடையே மோதல் மூண்டால் டிவி பெட்டிகளைப் பாதுகாக்க முடியாது என்பதால் இந்த நடவடிக்கை.
'அரசியல் பேசாதீர்'
அதேபோல கேன்டீன், ஊழியர்கள் பணியாற்றும் பகுதிகள், டிப்போ வளாகங்களில் யாரும் அரசியல் பேசக் கூடாது என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்கள், குறிப்பாக அரசியல் கட்சிகளின் யூனியனைச் சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக நின்று பேசவும் தடை செய்யப்பட்டுள்ளதாம்.
ஏசி பஸ்களை நிறுத்த உத்தரவு!
இன்னொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதிமுக அதிக இடங்களில் முன்னணியில் இருப்பதாக செய்திகள் வெளியானால் உடனடியாக மாநகரில் ஓடும் ஏசி பஸ்களை நிறுத்து விடவும் உதத்ரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகுதான் சென்னை மாநகரில் அதிக அளவிலான ஏசி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் தற்போதைய வெயில் காலத்தில் இந்த பஸ்களுக்கு சரியான கலெக்ஷனும், கிராக்கியும் உள்ளது.
சென்னையில் அடையார் மற்றும் அண்ணா நகர் என இரு டிப்போக்களில் ஏசி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 102 ஏசி பஸ்கள் உள்ளன. இதில் இரண்டு பஸ்கள் தற்போது எப்.சிக்குப் போயுள்ளன. எனவே 100 பஸ்கள் (நேற்று இரவு நிலவரப்படி) ஓடி வருகின்றன.
திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஏசி பஸ்களுக்கு அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையினர் ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே அதிமுக வெற்றி பெறும் நிலை ஏற்பட்டால் ஊழியர்களில் சிலர் ஏசி பஸ்களை குறி வைத்துத் தாக்கக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. எனவேதான் அதிமுக லீடிங்கில் இருப்பதாக செய்தி வெளியானால் ஏசி பஸ்களை நிறுத்தி விட்டு பத்திரப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications