விருத்தாச்சலத்திலிருந்து ரிஷிவந்தியம் வந்துள்ள விஜயகாந்த்துக்கு குஷி கிடைக்குமா?
2005ம் ஆண்டு தேமுதிகவைத் தொடங்கினார் விஜயகாந்த். அதன் பின்னர் 2006ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக தேமுதிக களம் கண்டது. யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை அள்ளி அனைவரையும் கவர்ந்தது.
இத்தேர்தலில் விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு யாரும் எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றார். அதேசமயம், அவரது கட்சி பிற இடங்களில் தோல்வி அடைந்தது.
இருப்பினும் பல தொகுதிகளில் அதிமுகவின் வாக்கு வங்கியை தேமுதிக நாறடித்தது. மேலும், பல தொகுதிகளில் 3வது இடத்தையும் பிடித்து தான் ஒரு புதிய அரசியல் சக்தி என்பதை நிரூபித்தது.
கடந்த 2009ல் நடந்த லோக்சபா தேர்தல் வரை விஜயகாந்த் தனித்தே போட்டியிட்டு வந்தார். ஆனால் இப்படியே போனால் கட்சி கண்டமாகி விடும் என்று தேமுதிகவினர் தலைமையை நெருக்க ஆரம்பித்ததால் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் முடிவுக்கு வந்தார் விஜயகாந்த்.
தற்போதைய சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக கூட்டணி அரசியலில் புகுந்து போட்டியிடுகிறார் விஜயகாந்த்.
அவர் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுகிறார். முற்றிலும் கிராமங்கள் நிறைந்த இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் கடும் போட்டியைக் கொடுத்துள்ளார்.
இருப்பினும் இதைத் தாண்டி விஜயகாந்த் வெல்வார் என்று அவரது கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.