சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலு-இளங்கோவன் ஆதரவாளர்கள் பயங்கர அடிதடி

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து தங்கபாலு ராஜினாமா செய்தார்.
இது குறித்துக் கேள்விப்பட்டதும் இளங்கோவன் உள்ளிட்ட பிற கோஷ்டித் தலைவர்களின் ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். பட்டாசுகளும் வெடித்தனர்.
இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்க இளங்கோவன் ஆதரவாளர்களான முன்னாள் கவுன்சிலர் மணிப்பால், கோபி, பூக்கடை வேலு ஆகியோர் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர்.
ஆனால், அவர்களை உள்ளே விடாமல் தங்கபாலு ஆதரவாளர்களான சந்திரன் உள்ளிட்டோர் தடுத்தனர். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாக மாறியது.
இளங்கோவன் ஆதரவாளர்கள் சந்திரனை அடித்து உதைத்தனர். இதையடுத்து தங்கபாலு ஆதரவாளர்கள் பதிலுக்கு திருப்பித் தாக்கினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர அடிதடி ஏற்பட்டது. ஒருவரையொருவர் அடித்து கீழே தள்ளி மிதித்துக் கொண்டனர்.
சிலர் தப்பி சத்தியமூர்த்தி பவனுக்குள் ஓட, அவர்களை உள்ளேயும் விரட்டிச் சென்று தாக்கினர். இதில் கட்சி அலுவலகத்தில் இருந்த நாற்காலி, மேஜைகளும் உடைக்கப்பட்டன.
இதையடுத்து பிற நிர்வாகிகள் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினார். இதைத் தொடர்ந்து இளங்கோவன் ஆதரவாளர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இந்த சண்டை நடந்தபோது தங்கபாலு சத்திமூர்த்தி பவனுக்குள் தான் இருந்தார். அவர் வெளியே வரவில்லை.
தங்கபாலு ராஜினாமா செய்ததை கேள்விபட்டதும் அவரது எதிர் கோஷ்டியை சேர்ந்த காங்கிரசார் சத்திய மூர்த்தி பவனுக்கு வந்து இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்தனர்.
கோவையில் தங்கபாலு கொடும்பாவி எரிப்பு:
இந் நிலையில் கோவையில் தங்கபாலுவின் கொடும்பாவியை தொண்டர்கள் எரித்தனர். கோவை காந்திபுரத்தில் இளங்கோவன் ஆதரவாளர்கள் தங்கபாலுவிற்கு எதிராக கோஷமிட்டபடி தங்கபாலுவின் உருவ பொம்மையை எரித்தனர். இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications