120 புதிய பொறியியல் கல்லூரிகள் அனுமதி கோரி விண்ணப்பம்: அதிகரிக்கும் இடங்கள்
சென்னை: தமிழகத்தில் 120 புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொறியியல் படிப்பிற்கான இடங்கள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பி.இ. , பி.டெக். படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் இன்று அதிகாலையிலேயே துவங்கியது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்ப வினியோகத்தை துணை வேந்தர் மன்னர் ஜவகர் தொடங்கி வைத்தார்.
இது குறித்து மன்னர் ஜவகர் நிருபர்களிடம் கூறியதாவது,
வரும் கல்வியாண்டிற்கான பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் 62 இடங்களில் வழங்கப்படுகிறது. இதில் சென்னையில் மட்டும் 5 இடங்களில் விண்ணப்ப வினியோகம் நடக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 488 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதி்ல் 460 சுயநிதி கல்லூரிகளும் அடக்கம். இதன் மூலம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 20 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கிடைக்கின்றன.
கடந்த ஆண்டு கலந்தாய்வு முடிந்த பிறகு 8 ஆயிரத்து 172 இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு 400 பொறியியல் கல்லூரிகள் தங்கள் பாடப்பிரிவுகளை அதிகரிக்கக் கோரி மனு அளித்துள்ளனர். இதனால் ஏற்கனவே உள்ள க்லலூரிகளிலேயே 30 ஆயிரம் கூடுதல் இடங்கள் கிடைக்கும். மேலும், இந்த ஆண்டில் 120 புதிய கல்லூரிகள் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளன. இதனால் கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கடந்த ஆண்டு 472 பொறியியல் கல்லூரிகள் இருந்தன. இந்த ஆண்டு புதிதாக 16 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 78 ஆயிரம் முதல் தலைமுறை மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் உயரும். அண்ணா பல்கலைக்கழகத்தில் 20 கவுண்டர்களில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications