காங்கிரஸ் தோற்கும் என முன்பே தெரியும்! - ஈவிகேஎஸ் இளங்கோவன்

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதல்வராக பதவி ஏற்ற ஜெயலலிதாவுக்கும், எதிர் கட்சி தலைவராக பதவி ஏற்கவுள்ள நண்பர் விஜயகாந்த்துக்கும் வாழ்த்துக்கள். தேர்தலில் மக்கள் பணத்திற்கு சோரம் போய் விடுவரோ என பயந்த நேரத்தில், தன்னிச்சையாக ஓட்டளித்து தமிழகம் பெருமை பெற சிறப்பாக பணியாற்றினர்.
நடக்க இருந்த தவறுகளையும், தில்லுமுல்லுகளையும் தடுத்த பெருமை தேர்தல் கமிஷனுக்கு கிடைத்துள்ளது. தமிழகத்தின் மின் பற்றாக்குறையை போக்குவது முதல் வேலை என ஜெயலலிதா கூறியது பாராட்டுக்குரியது. தடையில்லாத மின்சாரம் இருந்தாலே பல பிரச்னைகள் இருக்காது. தொழில் வளம் பெறும். விவசாயிகள் மகிழ்ச்சி அடைவர்.
63 நாயன்மார்களும் பஞ்சபூதங்களும்...
தேர்தலில் 63 நாயன்மார்களாக காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியினர். தற்போது பஞ்ச பூதங்களாக வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் தோல்வியை ஆராய்வது இப்போது சரியாக இருக்காது. இந்நிலை ஏற்படும் என தேர்தலுக்கு முன்பே தெரியும். இனி நடப்பவையாவது நல்லவையாக இருக்க வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். தங்கபாலு பதவி விலக மேலிடம் உத்தரவிட்டது. காங்கிரசுக்கு புதிய தலைவரை சோனியா விரைவில் அறிவிப்பார்.
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு சகவாச தோஷம் தான் முக்கிய காரணம். மக்கள் லஞ்ச லாவண்யம் ஒழிக்கப்பட வேண்டும். குடும்ப அரசியல் வளர்ந்து விட கூடாது என்பதற்காக தேர்தலில் ஓட்டளித்தனர். சோனியா யாரை தலைவராக அறிவித்தாலும், அதை ஏற்று காங்கிரசை வளப்படுத்த தொண்டர்கள், தலைவர்கள் ஒன்றாக இணைந்து செயல்பட பாடுபடுவேன்," என்றார்.












Click it and Unblock the Notifications