நாம் தமிழர் கட்சியின் ஆண்டு விழாவுக்கு போலீஸ் அனுமதி
சென்னை: இன்று மாலை நடக்கும் நாம் தமிழர் கட்சியின் முதலாம் ஆண்டு விழாவுக்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி தனது முதலாம் ஆண்டு விழாவை இன்று மாலை வேலூரில் கொண்டாடுகிறது. இதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்டதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் வேலூர் மாவட்ட பொறுப்பாளர் திருமலை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
நாம் தமிழர் கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெறுகின்றது. இதனை முன்னிட்டு இதற்கான விழா இன்று (18-ம் தேதி) வேலூரில் நடைபெற உள்ளது.
இதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்டு கடந்த 1- ம் தேதி மனு கொடுக்கப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி வழங்கவில்லை. எனவே, இந்த விழாவிற்கு அனுமதி வழங்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ராஜேஸ்வரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வக்கீல் வேலூரில் இன்று மாலை நடக்கும் நாம் தமிழர் கட்சி ஆண்டு விழாவிற்கு தற்போது போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அதனால் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்றார். அதற்கு மனுதாரரின் வக்கீல் கோவிந்தராஜும் சம்மதித்தார். இதையடுத்து நீதிபதி ராஜேஸ்வரன் இந்த வழக்கை முடித்து வைத்தார்.