சென்னை அருகே குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை கத்தியால் குத்திக் கொன்ற மகள்
பூந்தமல்லி: குடிபோதையில் தன்னைக் கற்பழிக்க முயன்ற தந்தையை மகள் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
சென்னை மாங்காடை அடுத்த கோவூர் தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரத்னமணி (57). பக்ரைன் நாட்டில் வெல்ட்ராக வேலை பார்த்த அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வந்துவிட்டார். 2004-ம் ஆண்டு அவரது மனைவி இறந்துவிட்டார்.
ரத்னமணிக்கு ஆன்ட்ரோ செல்வின் பிரபு (27) என்ற மகனும், அஞ்சுஜெர்மி (18) என்ற மகளும் உள்ளனர். ஆன்ட்ரோசெல்வின் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு கால்சென்டர் ஒன்றில் வேலை பார்க்கிறார். மகள் அஞ்சுஜெர்மி கோவூரில் உள்ள ஒரு புனித ஜோசப் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர்களது சொந்த ஊர் நாகர்கோவில். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் கோவூரில் வாடகைக்கு வீடு எடுத்தனர். நேற்று முன்தினம் இரவு ஆன்ட்ரோசெல்வின் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் அப்பாவும், மகளும் மட்டும் தான் இருந்தனர். குடிபோதையில் இருந்த ரத்னமணி தனது மகளை கற்பழிக்க முயன்றுள்ளார். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அஞ்சுஜெர்மி தனது தந்தையைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
உடனே தனது அண்ணனுக்கு போன் செய்து நடந்த விவரத்தைக் கூறினார். ஆன்ட்ரோசெல்வின் தங்கள் வீட்டு உரிமையாளருக்கு போன் செய்து தான் வரும் வரை அஞ்சுவுடன் இருக்குமாறு கூறியுள்ளார். அதிகாலையில் வீட்டுக்கு வந்த ஆன்ட்ரோசெல்வின், 8 மணியளவில் மாங்காடு போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அஞ்சுஜெர்மியை கைது செய்தனர். ரத்னமணியின் உடலை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அஞ்சுஜெர்மி கூறியதாவது,
கடந்த 1 ஆண்டுக்கு முன் நான் 5 பவுன் தங்க நகையை என்னுடைய தோழியிடம் கொடுத்து வைத்திருந்தேன். அதை வாங்கி வருமாறு என் தந்தை என்னிடம் அடிக்கடி தகராறு செய்தார்.
மேலும், தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து சித்ரவதை செய்தார். நேற்று முன்தினம் இரவும் குடித்துவிட்டு வந்த அவர் என்னை கற்பழிக்க முயன்றார். என்னைக் காப்பாற்றிக் கொள்ள நான் அவரை கத்தியால் குத்திக் கொன்றேன் என்றார்.
ரத்னமணியின் வயிற்றில் 4 இடங்களில் கத்திக்குத்து இருந்தது.
தன் மானத்தைக் காப்பாற்ற தற்காப்புக்காக அஞ்சுஜெர்மி கொலை செய்துள்ளதால் அவளுக்கு ஜாமீன் கிடைக்கலாம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications