டிஜிபியாக பொறுப்பேற்றார் ராமானுஜம்-போலீஸாருக்கு 4 கட்டளைகள் பிறப்பித்தார்
சென்னை: தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு மற்றும் உளவுத்துறை டிஜிபியாக ராமானுஜம் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். பதவியில் அமர்ந்ததும் முதல் வேலையாக போலீஸாருக்கு நான்கு கட்டளைகளை அவர் பிறப்பித்துள்ளார்.
நேற்று பிற்பகல் டிஜிபி அலுவலகத்திற்கு வந்து ராமானுஜம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பதவியிலிருந்து இடம் மாறும் டிஜிபி போலாநாத் வாழ்த்து தெரிவித்து பொறுப்பை ஒப்படைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ராமானுஜம். அப்போது அவர் கூறுகையில்,
பாரம்பரிய பெருமையும், வளமான எதிர்காலமும் கொண்ட தமிழக காவல்துறையின் தலைமை பொறுப்பை மிக்க பணிவோடு நான் ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு இந்த பொறுப்பு அளிக்கப்பட்டதற்காக பெருமை அடைகிறேன். என்மீது நம்பிக்கை வைத்து, இந்த பொறுப்பை எனக்கு அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக காவல்துறையில் பல்வேறு நிலைகளிலும் திறமைமிக்க அதிகாரிகள் பொறுப்பேற்று வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் அரசின் எதிர்பார்ப்பை அவர்கள் நிச்சயமாக நிறைவேற்றி தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்பு காவல் அமைப்பு ஏற்படுத்தப்பட்டபோதே, தோற்றுவிக்கப்பட்ட அடிப்படை கொள்கைகளாக கீழ்க்கண்டவற்றை தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு, நான் நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
- காவல்துறையினரின் அடிப்படை பணி என்பது குற்ற செயல்களை தடுப்பது மற்றும் சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதுதான். இதை வைத்துதான் காவல்துறையினரின் செயல்பாடு மதிப்பிடப்படுமே தவிர, காவல்துறை நடவடிக்கைகளின் தோற்றத்தினால் மட்டுமல்ல என்பதை உணரவேண்டும்.
- பொதுமக்களின் ஆதரவை தொடர்ந்து பெறுதல், தேவையற்ற பலபிரயோகத்தை தவிர்த்தல் போன்றவற்றை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும்.
- நீதிமன்றத்தின் அதிகாரங்களை கையில் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
- விருப்பு, வெறுப்பற்ற முறையில் நடந்துகொள்ளுதல், எந்தவித வேற்றுமையும் பாராட்டாமல் பொதுமக்களுக்கு சேவை செய்தல், பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளை காப்பாற்ற எந்தவித தியாகத்துக்கும் தயாராக இருத்தல் ஆகியவை காவல்துறையினரின் பிரதான கடமைகளாக இருக்க வேண்டும்.
சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதுதான் அரசின் முதல் கடமையாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதோடு, அது நமது பொறுப்பை இன்னும் அதிகமாக்கியிருக்கிறது என்பதையும் உணர வேண்டும்.
அரசின் இந்த நம்பிக்கைக்கு ஏற்றவாறு நம்மால் செயல்பட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தமிழக காவல்துறையின் அனைத்து அதிகாரிகளும், காவலர்களும் தனிப்பட்ட முறையிலும், கடமையாற்றுவதிலும் அப்பழுக்கற்றவர்களாக நடந்துகொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். எனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த பணியில் பொதுமக்கள், ஊடகங்கள் மற்றும் அனைத்து பிரிவினரும் தக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் ஒரே சமயத்தில் உளவுப் பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகிய இரு முக்கியத் துறைகளுக்கும் டிஜிபியாக ஒருவர் பதவி வகிப்பது இதுவே முதல் முறையாகும் என்று தெரிகிறது.
விஜயக்குமாருக்காக காத்திருக்கும் சட்டம் ஒழுங்கு?
இருப்பினும் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக விரைவில் விஜயக்குமார் நியமிக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவேதான் அந்தப் பொறுப்புக்கு தனியாக யாரையும் அரசு நியமிக்கவில்லை என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications