கிராம நிர்வாக அதிகாரி இல்லாத குனியமுத்தூர்: மாணவர்கள் பரிதவிப்பு
கோவை: குனியமுத்தூர் பகுதியின் கிராம நிர்வாக அதிகாரி பணியிடம் கடந்த ஆறு மாதங்களாக காலியாக இருக்கிறது.
குனியமுத்தூர்
கோவை மாநகராட்சி எல்லையை ஒட்டி பாலக்காடு செல்லும் சாலையில் உள்ளது குனியமுத்தூர். மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதி. இப்பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள், மில்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இங்கு கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் மாற்றப்பட்டார். சுண்டக்காமுத்தூர் கிராம நிர்வாக அதிகாரியான துரைசாமியே கூடுதல் பொறுப்பாக குனியமுத்தூரையும் கவனித்து வருகிறார்.
பரிதவிக்கும் மாணவர்கள்
இரு கிராம நிர்வாக அலுவலகங்களின் பொறுப்பையும் ஒரே அதிகாரி கவனிக்க வேண்டி இருப்பதால், சான்றிதழ்கள் வழங்குவதில் பெரும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரியில் சேர விரும்பும் மாணவ, மாணவியரில் பலரும் வங்கிக்கடன் பெற விண்ணப்பிக்கும்போது, குடும்பத்தின் ஆண்டு வருவாய் சான்று அவசியமாகிறது. அதே போல புதிய படிப்புகளில் சேர ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அவசியமாகிறது. ஆனால் ஒவ்வொரு சான்றிதழுக்கும் மாணவர்களும், பொதுமக்களும் சுண்டக்காமுத்தூருக்கு ஓட வேண்டி இருக்கிறது. அங்கு அலைமோதும் கூட்டத்தினால் சான்றிதழ் பெற அரை நாள் முதல் முழு நாள் வரை காத்துக்கிடக்க வேண்டியுள்ளது.
கோரிக்கை
பள்ளி, கல்லூரி சேர்க்கை நேரத்தில் மக்களின் சிரமம் கருதி, குனியமுத்தூர் கிராம நிர்வாக அலுவலராக புதிய அதிகாரியை உடனே நியமிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குனியமுத்தூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications