கொள்ளை நகரமாகும் கோவை: கண்ணில் மிளகாய் பொடி தூவி 22 பவுன் கொள்ளை
கோவை: கோவையில் தங்க நகை செய்பவர் கண்ணில் மிளகாய் பொடியைத் தூவி 22 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
தங்க நகைகள் செய்பவர்
கோவை ஆர்.எஸ். புரம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் தங்க நகைகள் செய்யும் பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் செய்யப்பட்ட நகைகளை பாலிஷ் செய்வதற்காக வெரைட்டி ஹாலில் உள்ள பாலிஷ் போடும் இடத்திற்கு எடுத்து வருவது வழக்கம்.
கொள்ளை
நேற்று காலை தனது இருசக்கர வாகனத்தில் 22 சவரன் மதிப்புள்ள நகைகளை பாலிஷ் போடுவதற்காக எடுத்து வந்துள்ளார். அவரை பின் தொடர்ந்து இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் வந்துள்ளனர். பாலிஷ் போடும் கடை வாசலில் அசோக்குமார் பைக்கை நிறுத்திக் கொண்டிருக்கும்போது, அந்த நபர்கள் அவர் முகத்தில் மிளகாய் பொடியைத் தூவிவிட்டு நகைகளை எடுத்துக்கொண்டு பைக்கில் தப்பித்து விட்டனர்.
விசாரணை
வெரைட்டி ஹால் பகுதியின் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்.ஈஸ்வரி கொள்ளை குறித்து விசாரணை நடத்தி வருகிறார். அசோக்குமார் தினமும் பாலிஷ் போட வருவதை நோட்டமிட்டு கொள்ளையடித்துள்ளதாக காவல்துறை சந்தேகப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2-ம் தேதி 2 பேர் போலீஸ் போல் நடித்து இரவு நேரத்தில் கார்களை நிறுத்தி கத்தி முனையில் கொள்ளையடித்துள்ளனர். இதில் ஒரு கல்லூரி மாணவனை 2 செல்போன், நகை, பணத்திற்காக கத்தியால் குத்தியுள்ளனர்.
மேலும் இதே நபர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி ரியல் எஸ்டேட் அதிபர் அருள்மணி என்பவரை வலது தோள்பட்டையில் கத்தியால் குத்திவிட்டு அவரிடம் இருந்த ரூ. 28 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துவிட்டுச் சென்றனர். கோவை கொள்ளை நகரமாகிக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications