நூற்பாலைகள் இன்று ஒரு நாள் ஸ்ட்ரைக்- ரூ 250 கோடி இழப்பு
கோவை: நூல் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால், அதைச் சரிகட்டும் வகையில், நாடு முழுவதும் உள்ள நூற்பாலைகள் திங்கள்கிழமை (மே 23) ஒரு நாள் உற்பத்தியை நிறுத்தின.
இந்த ஒருநாள் ஸ்ட்ரைக்கால் ரூ 250 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் உற்பத்தியை மூன்றில் ஒரு பங்கு குறைக்கவும் முடிவு செய்துள்ளன. இதனால் நாளொன்றுக்கு ரூ 15 லட்சம் இழப்பு ஏற்படுகிறது.
கடந்த இரு மாதங்களில் நூல் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துவிட்டது. இதனால் நூற்பாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட நூல்கள் கொள்முதல் செய்யப்படாமல் தேக்கமடைந்து வருகின்றன. மேலும் ஊக்கத் தொகைகள் முற்றாக நிறுத்தப்பட்டதால் இந்தத் தொழில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
நூல் கொள்முதல் குறைந்துவிட்ட சூழலில், தொடர்ந்து உற்பத்தி செய்தால் மேலும் நஷ்டம் ஏற்படக்கூடும் என்பதால் திங்கள்கிழமை ஒரு நாள் உற்பத்தியை நிறுத்துவதாக, இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு அறிவித்தது.
இந்தியாவின் நூல் உற்பத்தியில் 47 சதவீதம் தமிழகத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்த இடங்களில் மகாராஷ்டிரம், குஜராத், இமாசல பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன.
"நூற்பாலைகளின் இயக்கம் ஒரு நாள் நிறுத்தப்படுவதால் ஒரு கோடி கிலோ நூல் உற்பத்தி பாதிக்கப்படும். இதன் மதிப்பு ரூ. 250 கோடி. தமிழகத்தில் மட்டும் சிறிதும் பெரிதுமாக 2,200 நூற்பாலைகள் உள்ளன. இவற்றில் 6 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். செவ்வாய்க்கிழமை முதல் ஒரு ஷிப்ட் நிறுத்தப்படுவதால், நாளொன்றுக்கு ரூ. 15 லட்சம் உற்பத்தி இழப்பு ஏற்படும்", என்று தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் செயலர் கே.செல்வராஜ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications