வேலூர் மத்திய சிறையில் 81 வயது கைதி மாரடைப்பால் மரணம்
வேலூர்: வேலூர் மத்திய சிறையில் தண்டனை கைதி ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த ஆசனாம்பட்டு ரோடு கம்பிக் கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு (81). இவர் கடந்த 1994-ம் ஆண்டு சந்தன கட்டை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இவர் மீதான வழக்கில் கடந்த 2008-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் அவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது.
அதன்படி வேலூர் சிறையில் தனது தண்டனை காலத்தை கழித்து வந்த சேட்டுக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சேட்டு மரணம் குறித்து பாகாயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications