கூடுதல் அலைக்கற்றை மீண்டும் ஏலம் விடப்படலாம்! - கபில் சிபல்

குஜராத் மாநிலம் நடியாத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியின் இடையே செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "கடந்த ஆண்டு 3 ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் அரசுக்கு ரூ.1.06 லட்சம் கோடி வருவாய் கிடைத்தது. ஏலம் விடத்தக்க வகையில் கூடுதல் அலைக்கற்றை இருக்குமானால், ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அகண்ட அலைவரிசை வசதி செய்துத்தரப்பட வேண்டும் என அரசு விரும்புகிறது. இதற்காக சாம் பிட்ரோடா, நந்தன் நிலகேணி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது," என்றார்.
3ஜி அலைக்கற்றையில் ஏலம் விடத்தக்க வகையில் கூடுதல் அலைக்கற்றை உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கருதுகிறது. கூடுதல் அலைக்கற்றையை ஏலம் விடும் வழிமுறைகளை ஆராயுமாறு மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகத்துக்கு மத்திய நிதியமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விரைவில் லோக் பால் மசோதா...
லோக்பால் மசோதா குறித்து கபில் சிபலிடம் கேட்டபோது, "இப்போதைய குழு விவாதத்துக்குப் பின் ஜூன் 30-க்குள் இறுதி அறிக்கையைத் தயார் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில் இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்," என்றார்.
ஐஐடி பேராசிரியர்கள் தரம் குறைந்தவர்களா...
இந்தியாவில் உள்ள ஐஐடி, ஐஐஎம் ஆகிய உயர் கல்வி நிறுவனங்கள் உலகத் தரத்தில் இல்லை என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பது பற்றி கேட்டதற்கு, "அது அவரது சொந்தக் கருத்து," என்றார் கபில் சிபல்.












Click it and Unblock the Notifications