மனைவியிடம் செயின் பறிப்பு: நில ஆக்கிரமி்ப்புக் கும்பலின் வரிசை-பழ.கருப்பையா
சென்னை: நிலம் பறிப்பு கும்பல்கள் தான் என்னை மிரட்டுவதற்காக என் வீடு புகுந்து என் மனைவியிடம் செயினைப் பறித்துச் சென்றுள்ளனர் என்று அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளரும், அதிமுக எம்எல்ஏவுமான பழ.கருப்பையா கூறியுள்ளார்.
துறைமுகம் தொகுதி எம்எல்ஏவான எழுத்தாளர் பழ.கருப்பையாவின்
சென்னை கோபாலபுரம் பெசன்ட் ரோட்டு வீட்டுக்குள் நேற்று காலை புகுந்த வாலிபர் அவரது மனைவி கமலா ஆச்சியைத் தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த 10 பவுன் செயினைப் பறித்துச் சென்றான்.
அவன் தவறவிட்ட செல்போனை வைத்து அடுத்த சில மணி நேரத்திலேயே கொள்ளையன் கைது செய்யப்பட்டான். அவனது பெயர் முபாரக் என்று தெரியவந்துள்ளது.
இது குறித்து கருப்பையா நிருபர்களிடம் கூறுகையில், நான் எம்.எல்.ஏவாக உள்ள துறைமுகம் தொகுதி அங்கப்பன் நாயக்கன் தெருவில் முஸ்லிம் பெண்கள் படிக்கும் உருது பள்ளி ஒன்று உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இந்தப் பள்ளியின் ஒரு பகுதியை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
நில ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் நீதிமன்ற தடையாணை பெற்றுள்ளனர். சுமார் ஐந்தாண்டுகளாக உள்ள இந்த தடையாணையை நீக்கி, பள்ளி வளாகத்தை மீட்க முந்தைய தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதேபோல் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள மூர் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான சந்து ஒன்றை ஆக்கிரமித்து ஒருவர் கட்டடம் கட்டியுள்ளார். இது தொடர்பாக மாநகராட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கும், நீதிமன்ற தடையாணை காரணமாக நிலுவையில் உள்ளது.
இதையடுத்து இந்த இரு வழக்குகளிலும் உள்ள தடையாணையை நீக்கி, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை உடனடியாக மீட்கக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மாநகர காவல் துறை ஆணையர் ஆகியோரிடம் கடந்த வாரம் நான் மனு அளித்தேன்.
இதையடுத்து இந்த நில விவகாரங்களில் நான் தலையிடக் கூடாது என்று தொலைபேசியில் மிரட்டல்கள் வர ஆரம்பித்தன.
இப்போது என்னை மிரட்டும் அடுத்த கட்ட நடவடிக்கையாக இப்போது எனது வீடு புகுந்து எனது மனைவியின் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளனர் என்று கருதுகிறேன்.
இந்த வழக்குகளில் முன்பு பணியில் இருந்த அரசு வழக்கறிஞர்கள் சரிவர தங்கள் பணியைச் செய்யவில்லை. அரசு வழக்கறிஞர்கள் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதே இதுபோன்ற நிலைமைகளுக்கு காரணம். எனவே, அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படக் கூடியவர்கள் நேர்மையானவர்கள்தானா என்பதை உறுதிப்படுத்திய பிறகே நியமிக்க வேண்டும் என்றார் கருப்பையா.












Click it and Unblock the Notifications