கேபிள் டிவி உரிமையாளர்கள் சனிக்கிழமை அவசர கூட்டம்
சென்னை: தமிழக கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் வரும் சனிக்கிழமையன்று நடக்கிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சங்க தலைவர் காயல் ஆர்.எஸ்.இளவரசு வெளியிட்ட அறிக்கை:
அரசு கேபிள் டி.வி. தொழிலை கையகப்படுத்தும், கடைகோடி கேபிள் ஆபரேட்டர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று முதல்வரின் பிரகடனம், அடிமைப்பட்டுக் கிடந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மத்தியில் புதிய ரத்தம் பாய்ச்சியது.
கேபிள் டி.பி. தொழிலை நம்பி வாழும் 2 1/2 லட்சம் குடும்பங்களும, தாங்களே தமிழக முதல்வரானது போல அளவிலா ஆனந்தம் அடைந்துள்ளார்கள். ஆனால் அரசு கேபிளை எதிர்பார்த்து நிற்கும் இன்று கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மத்தியில் ஓர் அசாதாரண சூழ்நிலை மையம் கொண்டுள்ளது.
தொழிலை இழக்கும் அபாயம் வந்துவிட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மீது அசைக்க முடியாத நமது நம்பிக்கையை வெளிப்படுத்தவும், எதிர் நிற்கும் பிரச்சினை பற்றி எடுத்துரைக்கவும் தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வரும் 28-ந்தேதி சனிக்கிழமை சரியாக காலை 10 மணிக்கு சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள தேவர் திருமண மண்டபத்தில் சென்னை நகர கேபிள் டி.வி. உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
கேபிள் டி.வி. உரிமையாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்."
இவ்வாறு காயல் இளவரசு அறிக்கையில் கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications