மரியம் பிச்சையின் டிரைவர் ஆனந்த்தின் குடும்பத்தாரிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை
திருச்சி : பெரம்பலூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த அமைச்சர் மரியம் பிச்சை பயணித்த காரை ஓட்டி வந்த சென்னை டிரைவர் ஆனந்த்தின் பெற்றோர், உறவினர்களிடம் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஒரே வாரத்தில் பெரம்பலூர் அருகே நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார் மரியம் பிச்சை. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டதைத் தொடர்ந்து தற்போது சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணையில் குதித்துள்ளனர்.
கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் நேரடியாக விசாரணையில் இறங்கியுள்ளார். பெரம்பலூர் வந்த அவர், விபத்தில் சிக்கிய காரை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காரை ஓட்டிச் சென்ற கார் டிரைவர் ஆனந்த்திடமும் அவர் விசாரணை நடத்தினார்.
விபத்து நடந்த பகுதியில் விபத்தை நேரில் பார்த்த ரவிச்சந்திரன், மகேந்திரன் ஆகியோரிடமும் அர்ச்சனா விசாரணை நடத்தினார்.
டிரைவர் ஆனந்த்திடம் நடத்திய விசாரணையில் சில முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில், ஆனந்த்தின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடந்துள்ளது.
இதற்கிடையே விபத்துக்குக் காரணமான அந்த மர்ம லாரியைப் பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் லாரியை கண்டுபிடிக்க தீவிரமாக விசாரணையில் குதித்துள்ளனர்.
விரைவில் அந்த லாரியும், டிரைவரும் சிக்குவார்கள். அதன் பின்னர் இந்த வழக்கில் துப்பு துலங்கும் என்று சிபிசிஐடி போலீஸ் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications