மானிய விலையில் உர மூலப்பொருளை வாங்கி பட்டாசு நிறுவனங்களுக்கு விற்ற 12 பேர் கைது
தூத்துக்குடி: கரூரைத் தொடர்ந்து தூத்துக்குடியில் உர மோசடியில் ஈடுபட்ட கும்பலைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
மானிய விலையில் உர மூலப்பொருளை வாங்கி பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வந்த 12 பேரை சி.பி.ஐ.-ன் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ராயல் குளோரைட்ஸ் என்ற பெயரில் வெடி மருந்து தொழிற்சாலை உள்ளது.
கோவில்பட்டியைச் சேர்ந்த சேவியர் ஜெயபால், ராஜவேல், பால்ராஜ், செண்பகராஜ், மதுரையைச் சேர்ந்த சீனிவாசன் ஆகியோர் இதன் இயக்குனர்களாக உள்ளனர்.
இவர்கள் மத்திய அரசின் இந்தியன் பொட்டாஷ் லிமிடெட் நிறுவனத்திடம் உரம் தயாரிக்க பயன்படும் பொட்டாஷியம் குளோரைடு மூலப்பொருளை மானிய விலைக்கு வாங்கி விவசாயத்திற்கு பயன்படுத்தாமல், பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு கூடுதல் விலைக்கு விற்று வந்தனர்.
இதனால் அரசுக்கு ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இது குறித்து சி.பி.ஐ.யின் சென்னை பொருளாதார குற்றப்பிரிவினருக்கு ரகிசய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான தனிப்படையினர் சேவியர் ஜெயபால், ராஜவேல், பால்ராஜ், செண்பகராஜ், சீனிவாசன், ஏஜெண்ட்டுகள் மதுரை லட்சுமணன், ராஜபாண்டியன், ரவிச்சந்திரன், முரளி, ஸ்ரீராம் அசோக், திருப்புவனம் கார்த்திகேயன், நாகபட்டினம் பாலாஜி ஆகியோரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவர்களை மதுரை தலைமை ஜுடீஷியல் மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் நீதிபதி ஜோசப் டேவிட் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது, குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் ஜூன் மாதம் 7-ம் தேதி வரை ரிமாண்டில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக திருச்சியிலுள்ள தமிழ்நாடு கூட்டுறவு சந்தையியல் கூட்டமைப்பு (டான்பெட்) நிறுவனத்திடமிருந்து தான்தோன்றிமலை வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மையத்தின் தனி அலுவலர் செல்லமுத்து உரங்களை விவசாயப் பணிகளுக்கு வழங்குவதற்காக மானிய விலையில் பெற்று, அவற்றை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து மோசடி செய்தார்.
இந்த ஊழல் குறித்து புகார் குறித்து உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி்ருச்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா கோரியிருந்தார். ஆனால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. தாந்தோணி யூனியன் வேளாண்மை பொறியல் தனி அலுவலர் செல்லமுத்து மட்டும் சஸ்பெணட் செய்யபட்டார்.
திமுக ஆட்சியில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் ஜெயலலிதா முதல்வரானதைத் தொடர்ந்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீஸார், கூட்டுறவு மையத்தின் துணைப் பதிவாளர் பாக்கியநாதன் கொடுத்த புகாரின் பேரில், தான்தோன்றிமலை அக்ரோ சர்வீஸ் முன்னாள் தனி அலுவலர் செல்லமுத்து (48),திருச்சி டான்பெட் துணை மேலாளர் பரமசிவம் (57), திருச்சி வேளாண்மைத் துறை உதவி இயக்குநராக இருந்த மீனாட்சிசுந்தரம் (53), கரூர் காகிதபுரத்திலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவனத்தின் பொது மேலாளர் ராஜகோபாலன் (53), உதவிப் பொது மேலாளர் கல்யாணசுந்தரம் (56) ஆகியோர் உள்பட 7 பேரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications