சபாநாயகர் தேர்தலுக்கான வேட்பு மனு: ஜெயக்குமார் தாக்கல்
சென்னை: சபாநாயகர் தேர்தலுக்கான வேட்பு மனுவை ராயபுரம் எம்.எல்.ஏ. ஜெயக்குமார் தாக்கல் செய்துள்ளார். அதேபோல துணை சபாநாயகர் பதவிக்கு ப.தனபால் மனு தாக்கல் செய்தார்.
அதிமுகவைச் சேர்ந்த இவர்கள் இருவரும் இன்று முற்பகலில் சட்டசபை செயலாளர் ஜமாலுதீனிடம் தங்களது மனுக்களைக் கொடுத்தனர்.
இருவரின் மனுக்களையும் முதல்வர் ஜெயலலிதா முன்மொழிய, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழிமொழிந்தார். மனு தாக்கலின்போது அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், சண்முகவேலு, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் சபாநாயகர் தேர்தல் குறித்து ஜமாலுதீன் கூறுகையில்,
சட்டசபை சபாநாயகர் பதவிக்கு மனுதாக்கல் இன்று கடைசி நாள். சபாநாயகர் பதவிக்கு ராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெயக்குமாரும், துணை சபாநாயகர் பதவிக்கு ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ. தனபாலும் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இந்த 2 பேர் மட்டுமே மனுதாக்கல் செய்துள்ளனர். நாளை காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடும். இதில் தற்காலிக சபாநாயகர், புதிய சபாநாயகர் ஜெயக்குமாரை முறைப்படி தேர்ந்தெடுப்பார். பின்னர் அவர் துணை சபாநாயகரை தேர்வு செய்வார் என்றார்.
சட்டசபையில் அதிமுகவுக்கு அறுதிப் பெரும்பான்மை உள்ளதால் வேறு யாரும் மனு தாக்கல் செய்ய வாய்ப்பில்லை. எனவே நாளை ஜெயக்குமாரும், தனபாலும் அவரவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளனர்.
புதிய சபாநாயகரா ஜெயக்குமார் அறிவிக்கப்பட்டவுடன் அவரை அவை முன்னவரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் ஆகியோர் கூட்டாக அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைப்பார்கள்.












Click it and Unblock the Notifications