தூங்கிக் கொண்டிருந்த கிராமத்தினர் மீது பெட்ரோல் குண்டுவீச்சு
மதுரை: திருமங்கலம் அருகே உள்ள கே.சென்னம்பட்டியில் திருவிழாவைப் பார்த்துவிட்டு தெருவோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகேயுள்ள உள்ளது கே. சென்னம்பட்டி.
இங்கு கடந்த இரண்டு நாட்களாக மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வந்தது. விழாவின் இறுதி நாள் இரவில் கோயிலின் எதிரில் உள்ள பள்ளி மைதானத்தில் நாடகம் நடந்தது.
நாடகம் முடிந்த பின்பு ஒரு தரப்பைச் சேர்ந்த 20 பேர் தங்களது தெருவில் உள்ள ஒரு மணல் மேட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் திடீரென பெட்ரோல் குண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அந்த குண்டு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது படவில்லை. மாறாக சாலையில் பயங்கர சத்தத்துடன் விழுந்தது. சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து எழுந்து அந்த இடத்தைவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து கள்ளிக்குடி காவல் நிலையத்தில் கள்ளிக்குடி விடுதலைச் சிறுத்தைகள் ஒன்றிய செயலாளர் சவுரியப்பன் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின் பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மதுரை மாவட்ட எஸ்பி அஸ்ரா கார்க்கும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். பெட்ரோல் குண்டு வீசிய மர்ம மனிதர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications