சபாநாயகராக தேர்வானார் ஜெயக்குமார்-ஓ.பன்னீர்செல்வம், விஜயகாந்த் இருக்கையில் அமர வைத்தனர்

தமிழக சட்டசபையின் சபாநாயகர் பதவிக்கு அதிமுகவின் ஜெயக்குமாரும், துணை சபாநாயகர் பதவிக்கு அதிமுகவின் ப.தனபாலும் மனு செய்திருந்தனர்.
இவர்களை எதிர்த்து யாரும் மனு செய்யவில்லை. இதையடுத்து இருவரும் இன்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இன்று காலை சட்டசபை கூடியதும், எம்.எல்.ஏக்களாக அமைச்சர் என்.ஆர்.சிவபதி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனோகரன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
பின்னர் ஜெயக்குமார் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதை தற்காலிக சபாநாயகர் செ.கு.தமிழரசன் அறிவித்தார்.
இதையடுத்து அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க் கட்சி தலைவர் விஜயகாந்த் ஆகியோர் ஜெயக்குமாரை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். அப்போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பின்னர் துணை சபாநாயகராக ப.தனபால் தேர்வு செய்யப்பட்டதாக சபாநாயகர் ஜெயக்குமார் அறிவித்தார்.
இதையடுத்து இருவரையும் பாராட்டி முதல்வர் ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் பேசினர்.
ஜெயலலிதாவுக்கு ஜெயக்குமார் நன்றி
முன்னதாக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் ஜெயக்குமார் பேசுகையில், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், சட்டசபையின் மாண்பு, மரபை சீர்குலைக்காமல் கண்ணியத்துடன் செயல்படுவேன். கட்சி பாகுபாடின்றி செயல்பட்டு அனைவரது பாராட்டுக்களையும் பெறுவேன்.
சட்டசபையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பேசுவதற்கு உரிய வாய்ப்பளிப்பேன் என்றார்.
ஜெயலலிதா பேச்சு
முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு உரிய மதிப்பளிக்கும் வகையில் ஆளுங்கட்சி செயல்படும். ஜனநாயகம் தழைக்க துணையாக இருப்போம்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு பேரவையின் மரபுகளைக் காப்பாற்றும் வகையில் சபாநாயகர் செயல்படுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications