சிவகங்கை பள்ளிக்குள் 12ம் வகுப்பு மாணவருக்கு கத்திக்குத்து! சக மாணவர் கொடூரம்! பெற்றோர்கள் அதிர்ச்சி
சிவகங்கை: சிவகங்கை அருகே நிரஞ்சான் கிராமத்தில் உள்ள ஆதி திராவிடர் நலப்பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து தக்குதல் விழுந்துள்ளது. சக மாணவனே கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளார். பெற்றோர்களை பதற வைத்த இந்த சம்பவம் குறித்த விவரங்களை பர்க்கலாம்.
சிவகங்கை அருகே உள்ள திராவிடர் நல அரசு பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் மாணவர் ஒருவருக்கும் அதே வகுப்பில் பயின்ற மாணவர் ஒருவருக்கும் தகராறு இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த முன்விரோதம் காரணமாக இன்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி கை கலப்பாக மாறியுள்ளது.

ஒரு கட்டத்தில் மாணவர் ஒருவர் தான், மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து, பாதிக்கப்பட்ட மாணவரை சரமாரியாக குத்தியது தெரியவந்தது. கத்திக்குத்து காயத்தால் மாணவன் வலியில் அலறி துடித்துள்ளான். 4 இடங்களில் மாணவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், விஷயம் தெரிந்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு மாணவரை கொண்டு சென்றனர்.
108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்ட மாணவருக்கு பல இடங்களில் காயங்கள் இருப்பதால் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சிவகங்கை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாணவனை குத்திய கத்தியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கத்தியால் குத்திய மாணவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இடையே சண்டை ஏற்பட்டு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பெற்றோர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.













Click it and Unblock the Notifications