ஏமன் உள்நாட்டு கலவரம்: தமிழக நர்சுகள் தவிப்பு
நெல்லை: ஏமனில் அதிபருக்கு எதிராக ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரத்தில் சிக்கி தமிழகம், கேரளத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான நர்சுகள் தவிக்கின்றனர். கடந்த 4 நாட்களாக இவர்கள் இருட்டறையில் பசியால் வாடுகின்றனர்.
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஏமன் தலைநகர் சானா அருகே ராணுவ வீரர்களுக்கு சிகிக்சை அளிக்கும் இராணுவ மருத்துவமனை உள்ளது. அந்நாட்டிலேயே மிகப்பெரிய மருத்துவமனையான அங்கு தமிழகத்தின் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பிற மாவட்டங்கள், கேரளாவைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நர்சுகள் பணிபுரிந்து வருகின்றனர். ஏமன் அதிபர் அலி அப்துல்லா சாலேவை பதவி விலகக் கோரி எதிர்கட்சி தலைவரான சேக்சாதிக் அல்அமரி்ன் ஆதரவாளர்களான பழங்குடியினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் சானாவில் கடந்த சில நாட்களாக அதிபரின் ஆதரவாளர்களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்துள்ளது.
இது வரை 50-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் பணியாற்றி வரும் இந்திய நர்சுகளை குறிவைத்து தாக்குதல் நடந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக அவர்கள் தங்கியுள்ள விடுதியை நோக்கி கலவரக்காரர்கள் கையெறி குண்டுகளை வீசுவதுடன் துப்பாக்கியால் சுட்ட வண்ணமும் இருக்கின்றனர். நான்கு நாட்களாக நர்சுகள் தங்கியுள்ள அறைக்களுக்கு மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. உணவு மற்றும் குடிநீர் இன்றி அவர்கள் தவித்து வருகி்ன்றனர்.
உயிருக்கு பயந்து அனைவரும் விடுதியில் உள்ள கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டுள்ளனர். நர்சுகளின் சேவையை விரும்பும் ராணுவத்தினர் மற்றும் ஏமன் அரசு அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றவில்லை. கலவரத்தில் காயமடையும் வீரர்களை காப்பாற்ற நர்சுகள் வேண்டும் என்பதால் அவர்களை தங்களது சொந்த நாட்டிற்கு அனுப்ப அந்நாட்டு அரசு மற்றும் ராணுவம் மறுத்து வருகிறது.
மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் பலரது செல்போன்கள் செயல் இழந்து வருகின்றன. இதனால் சார்ஜ் இருப்பவர்களிடம் செல்போன் வாங்கி தமிழகத்தில் உள்ள தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பல நர்சுகள் தகவல் தெரிவித்து தங்களை காப்பாற்றும்படி கதறி அழுகின்றனர். நர்சுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஏமனுக்கான இந்திய தூதரகம் இறங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications