கடும் வெயிலுடன் ஓய்ந்தது கத்திரி-இனியாவது வெப்பம் குறையுமா?
சென்னை: கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் இன்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான இன்று தலைநகர் சென்னை உள்பட பல பகுதகிளில் வெயில் வெளுத்து வாங்கியது. இதனால் இனி வரும் நாட்களில் கடும் வெப்பம் சற்று குறையும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கடந்த 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது. அன்று முதல் நேற்று வரை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் வெளுத்து வாங்கியது. குறிப்பாக சென்னை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் வெயில் மிகக் கடுமையாக இருந்தது.
இந்த கத்திரி பருவக்காலத்தில் தமிழகத்திலேயே அதிக அளவாக திருத்தணியில்தான் 111 டிகிரி அளவுக்கு வெயில் அடித்தது. ஆரம்பத்தில் சென்னையில்தான் வெயில் மண்டையைப் பிளந்தது. பின்னர் அது வேலூருக்கு ஷிப்ட் ஆகி விட்டது.
தற்போது தென் மேற்குப் பருவ மழை கேரளாவிலும், தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களிலும் தொடங்கியுள்ளதால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளுமை நிலவும் சூழல் அதிகரித்துள்ளது.
இந்தப் பின்னணியில் இந்த ஆண்டுக்கான கத்திரி வெயில் இன்று விடைபெற்றது. கடைசி நாளான இன்று கடும் வெயில் அடித்தது. சென்னையில் மண்டையைப் பிளக்கும் வெயில் காணப்பட்டது. அதேசமயம், மாலையில் சற்று வெப்பம் குறைந்து குளுமை குடியேறியுள்ளது.
வரும் நாட்களில் கடும் வெப்பம் குறைந்து குளுமை மெதுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications