பாளையில் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் சாவு: தனியார் மருத்துவமனை முற்றுகை
நெல்லை: நெல்லை தனியார் மருத்துவமனையில் பிறந்த 2 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பாளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பேட்டையைச் சேர்ந்த வேதாந்திரசாமி மனைவி காயத்ரி என்பவர் கடந்த 4-ம் தேதி பிரவசத்திற்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு போதிய வளர்ச்சியில்லாததால் இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் வீட்டிற்கு சென்ற குழந்தைக்கு மீண்டும் உடல் நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து கடந்த மூன்று தினங்களுக்கு முன் மீண்டும் அதே மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை குழந்தை இறந்தது. சிகிச்சை சரியில்லாததால் தான் குழந்தை இறந்ததாகக் கூறி உறவினர்களுக்கும், டாக்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையி்ல் தென்காசியைச் சேர்ந்த ஜெய்லானி மனைவி ஜென்சி அகமது என்பவரும் கடந்த சில தினங்களுக்கு முன் பிரவசத்திற்காக அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு நேற்று முன்தினம் இரவு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தைக்கு அதிகமாக மோஷன் போய் உள்ளது.
இதனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை அந்த குழந்தையும் இறந்தது. குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அரசு மருத்துவமனையி்ல் டாக்டராக வேலை செய்யும் அந்த குழந்தையின் உறவினர் ஒருவர் மருத்துவமனைக்கு வந்து என்ன சிகிச்சை அளித்தீர்கள் என்று கேட்டு மருத்துவமனை கண்ணாடியை உடைத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் தனியார் மருத்துவமனையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications