'முடிஞ்சது லீவு'... உற்சாகமாய் மீன்களை அள்ளி வந்த மீனவர்கள்!

தமிழக கடலில் மீன்கள் இனப்பெருக்கம் அடைவதற்கு வசதியாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் மே 30-ந்தேதி வரை 45 நாட்கள் ஆழ் கடலில் மீன் பிடிக்க மீனவர்களுக்கு தடை விதிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தடை காலம் ஏப்ரல் 15-ந்தேதி தொடங்கியது. இன்றுடன் தடை காலம் முடிவடைகிறது.
இதையொட்டி சென்னை மீனவர்கள் தடை காலம் முடிந்ததையொட்டி சென்னை புதுச்சேரி மீனவர்கள் நேற்று நள்ளிரவே விசைபடகு, பைபர், கட்டு மரங்களில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
காசிமேடு துறைமுகத்தில் இருந்து மட்டும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் புறப்பட்டனர். விசைப் படகுகளில் கடலுக்குள் செல்பவர்கள் மீன் பிடித்து திரும்பி வர சுமார் 5 அல்லது 6 நாட்கள் ஆகும். பைபர், கட்டு மரத்தில் செல்பவர் ஓரிரு நாட்களிலேயே திரும்பி வந்துவிடுவர்.
இன்று காலை காசிமேடு துறைமுகத்தில் இருந்து கட்டுமரத்தில் சென்ற மீனவர்கள் திரும்பி வந்தனர். அவர்கள் அதிக அளவு பெரிய அளவிலான மீன்கள் பிடித்து வந்திருந்தனர். கெளுத்தி, இறால், டைகர் எறால், பாறைமீன், சங்கரா, சீலா, நெத்திலி 6 அடி உயரம் உள்ள முள்வாளை உள்ளிட்ட மீன்கள் அதிகம் இருந்தன. இவற்றைப் பார்த்து மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறும்போது, "தடை காலம் முடிந்து கடலுக்குள் சென்றபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எங்களது வலையில் வழக்கத்தை விட பெரிய மீன்கள் அதிக அளவு சிக்கியது. எங்களால் ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடிக்க முடியாது. எனவே ஒரேநாளில் நாங்கள் திரும்பி வந்து விட்டோம்.
விசைப்படகு மீனவர்கள் கரைக்கு திரும்பி வரும்போது மிகப்பெரிய மீன்கள் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்," என்றார்.
தடை காலங்களில் மீன்விலை ரூ.300 முதல் 600 வரை விற்கப்பட்டது. தற்போது மீனவர்கள் கடலுக்கு சென்று திரும்பி வந்துள்ளதால் மீன்வரத்து அதிகரித்துள்ளது.
விசைப்படகு மீனவர்கள் திரும்பி வந்ததும் மீன்வரத்து மேலும் அதிகரிக்கும். இதைத்தொடர்ந்து மீன்விலை படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications