கேரள பல்கலை. உதவியாளர் தேர்வில் 40 ஆயிரம் விடைத்தாள்கள் மாயம்: குற்றப்பிரிவு விசாரணைக்கு உத்தரவு
திருவனந்தபுரம்: கேரள பல்கலைக்கழக உதவியாளர் பணிக்கான தேர்வில் 40 ஆயிரம் விடைத்தாள்கள் மாயமானது. இது பற்றி குற்றப்பிரிவு போலீ்ஸ் விசாரணைக்கு முதல்வர் உம்மன் சாண்டி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2005-ம் ஆண்டு கேரள பல்கலைக்கழக உதவியாளர் பணிக்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். பின்னர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. இதில் 200 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுஜித் என்பவர் லோக் ஆயுக்தாவில் ஒரு வழக்கு தொடர்ந்தார். பணி நியமனம் செய்யப்பட்ட 200 பேரில் 180 பேர் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமானவர்கள் என்பதால் பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருக்கலாம் என்றும், இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த லோக் ஆயுக்தா தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்களை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் விடைத்தாள்கள் ஒப்படைக்கப்படவில்லை.
இதை தொடர்ந்து நடத்திய விசாரணையில் 40 ஆயிரம் விடைத்தாள்கள் மாயமானது தெரிய வந்தது. இதனால் பணி நியமனங்களை ரத்து செய்ய லோக் ஆயுக்தா உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அப்போதைய கேரள அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. விடைத்தாள் மாயமானது பற்றி விசாரிக்க ஒரு விசாரணை கமிஷனை நியமிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசு நியமித்த விசாரணை கமிஷனாலும், மாயமான விடைத்தாள்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து விடைத்தாள் மாயம் பற்றி குற்றபிரிவு போலீசார் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்றத்திற்கு விசாரணை கமிஷன் சிபாரிசு செய்தது. இந்நிலையில் விடைத்தாள்கள் மாயமானது குறித்து குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு முதல்வர் உம்மன் சாண்டி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications