ஒரு வாரத்தில் மணல் விலை குறையும்: பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் தகவல்
ஈரோடு: இடைத்தரகர்கள் இன்றி பொதுப்பணித்துறை நேரடியாக மணல் விற்பனை செய்ய உள்ளதால், ஒரு வாரத்தில் மணல் விலை குறையும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
பொதுப் பணித்துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு ராமலிங்கம் முதன்முறையாக ஈரோடு வந்தார். அங்கு அவர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கடந்த திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது. அது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
என் துறையில் ஆண்டு ஒன்றுக்கு 12 லட்சம் டன் மணல் மட்டுமே எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில் முறைகேடு நடந்துள்ளது.
திமுக ஆட்சியில் மணல் கொள்ளை அதிகளவில் நடந்துள்ளது. இனியும் முறைகேடு நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இனி, இடைத்தரகர்கள் இன்றி பொதுப்பணித்துறை நேரடியாக மணல் விற்பனை செய்ய உள்ளது. இதனால் ஒரு வாரத்தில் மணல் விலை குறையும்.
முல்லை பெரியாறு அணையைப் பொறுத்தவரை, அணை உறுதியாக உள்ளது. அதன் ஆய்வுக் குழுவில் தமிழகத்தின் நிலையை அதிகாரிகள் எடுத்துக் கூறுவர். புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரள அரசின் முடிவை, தமிழகம் ஏற்காது.
காவிரி டெல்டா பாசன விவசாயத்துக்கு, இந்தியா சுதந்திரம் பெற்ற பின் முதன் முறையாக வரலாற்று சாதனையாக, ஜூன் 12-ம் தேதிக்கு பதில் ஜூன் 6-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, காவிரி நீர் கடைமடைக்கும் செல்லும் வகையில், கூடுதலாக நீர் திறக்கப்படும்.
காவிரி ஆறு செல்லும் பாசன வாய்க்கால்களில் தூர்வாரும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. அப்பணி, ஜூன் 5-ம் தேதிக்குள் முடிக்கப்படும்.
ஈரோடு பகுதிகளில் உள்ள பாசன கால்வாய்களில் சாய, தோல் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும். அதற்கான நடவடிக்கையை தற்போது துவக்கியுள்ளோம்.
தமிழகத்தில் பவானிசாகர் அணையை கட்டியவரும், காவேரி தொழில்நுட்பக் குழு தலைவராகவும் உள்ள மோகனகிருஷ்ணனை, தமிழக அரசு சார்பில் கவுரவிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications