உடுமலைப்பேட்டை நகர் மன்ற தலைவர் வேலுச்சாமி மீது மில் அபகரிப்பு புகார்
திண்டுக்கல்: பேப்பர் மில்லை அபகரித்துக் கொண்ட உடுமலைப்பேட்டை நகர் மன்ற தலைவர் வேலுச்சாமியிடம் இருந்து அதை மீட்டுத்தரக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள பேச்சிநாயக்கனூரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (46). இவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் என்று உண்ணாவிரதம் இருந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நான் கடந்த 25 ஆண்டுகளக்கு மேலாக பேப்பர் மில் நடத்தி வருகிறேன். குமாரபாளையத்தில் எனது நண்பர்கள் கண்ணன், பாலுச்சாமியுடன் இணைந்து பேப்பர் மில்லை ஆரம்பித்தேன்.
இதற்காக எனது சார்பில் ஒரு கோடியே, நான்கு லட்ச ரூபாய் கொடுத்தேன். பின்னர் கண்ணன் பங்குதாரர் பதவியில் இருந்து விலகினார்.
ஆடிட்டர் பாலகிருஷ்ணன் என்பவரை உடுமலைப்பேட்டை திமுக நகர் மன்றத் தலைவர் வேலுச்சாமி அறிமுகம் செய்து வைத்து, அவரை மில்லில் பங்குதாரர் ஆக்கினார்.
நான் வெளிநாடு சென்ற போது என் பெயரை நீக்கிவிட்டு வேலுச்சாமியின் மனைவி, உறவினர்கள் மில்லில் பங்குதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து பழனி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.
நான் வழக்கு தொடர்ந்ததால் ஆத்திரம் அடைந்த உடுமலைப்பேட்டை திமுக நகர் மன்றத் தலைவர் வேலுச்சாமி எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.
இது குறித்து போலீசில் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லை. அதனால் தான் நான் இங்கு உண்ணாவிரதம் இருக்கின்றேன் என்றார்.
உண்ணாவிரதம் இருந்த ராமச்சந்திரனை, சமாதானம் செய்து விசாரணைக்காக தாடிக்கொண்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications