மாதம் 35 கிலோ அரிசித் திட்டம்-நாளை ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்
சென்னை: அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் மாதந்தோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 35 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார்.
தற்போது தமிழகத்தில் பச்சை நிற ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மாதம்தோறும் 12 கிலோ முதல்20 கிலோ அரிசி, கிலோ அரிசி ஒரு ரூபாய் என்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன்கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் 35 கிலோ அரிசியை இலவசமாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஸ்ரீராம் நகர் ரேஷன் கடையில் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.
அந்தியோதயா அரிசித் திட்டத்தின் கீழ் 18.62 லட்சம் பேர் பயன் அடைவர். அதேபோல இதுவரை ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியை வாங்கி வந்தவர்களுக்கு இனி அது இலவசமாக கிடைக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் 1.83 கோடி பேர் பயனடைவர். இவர்களுக்கு மாதம் 20 கிலோ அரிசி இலவசமாக கிடைக்கும்.
நாளை ஜெயலலிதா. இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்த பின்னர் மாவட்டத் தலைநகரங்களில் அமைச்சர்கள் இத்திட்டத்தைத் தொடங்கி வைப்பார்கள்.
எப்படி இந்த அரிசியைப் பெறுவது என்பது குறித்து உணவு வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை ஆணையர் கே.பாலச்சந்திரன் கூறுகையில்,
ரேஷன் கடைகளில் இதுவரை ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி பெற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை முதல் இலவசமாக அரிசி வழங்கப்படும். இலவச அரிசி எல்லா நாட்களும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் பொது மக்கள் தங்களுக்கு கிடைக்காதோ என்று கவலைப்பட தேவையில்லை. எப்போது வேண்டுமானாலும் சென்று பெறலாம்.
இலவச அரிசி வழங்குவதில் குறைபாடு, முறைகேடு நடந்தால் அதுபற்றி தகவல் தெரிவிக்க அனைத்து மாவட்டங்களிலும் புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்த மையம் செயல்படும்.
சென்னையில் உள்ள மையத்தின் தொலைபேசி எண். 28592828. இதில் புகார் தெரிவிக்கலாம். ரேஷன் கடைகளில் இலவச அரிசி வினியோகத்தை கண்காணிக்க பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள அதிகாரிகள் ரேஷன் கடைகளில் திடீர் சோதனை மேற்கொள்வார்கள். பறக்கும் படை எல்லா மாவட்டத்திலும் அமைக்கப்படுகிறது என்றார்.
முதல் அரசு நிகழ்ச்சி
ஜெயலலிதா முதல்வரான பின்னர் அவர் பங்கேற்கவுள்ள முதல் அரசு நிகழ்ச்சி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications