குடிக்க பணம் தர மறுத்தால் கூலித் தொழிலாளி தீக்குளிப்பு: உயிர் ஊசல்
திருச்சி: திருச்சி அருகே மது குடிக்க பணம் தர மறுத்தால் வீட்டுக்குள் தீக்குளித்த கூலித் தொழிலாளி உயிருக்கு போராடி வருகின்றார்.
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ராஜீவ்நகரைச் சேர்ந்தவர் இளையராஜா (34). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி இலக்கியா என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.
இளையராஜாவுக்கு தினமும் குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. வேலைக்கு சென்று அதில் வரும் பணம் முழுவதையும் குடித்தே காலி செய்து வந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த இலக்கியா இளையராஜாவை கண்டித்துள்ளார். ஆனால் இளையராஜா திருந்தவில்லை.
இந்த நிலையில் இளையராஜாவுக்கு குடிக்கும் ஆசை ஏற்பட்டதால், தனது மனைவி இலக்கியாவிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். இதற்கு இலக்கியா மறுக்கவே இளையராஜா ஆத்திரம் அடைந்தார்.
உடனே விறுவிறுவென வீட்டு பக்கத்தில் இருந்த குடிசைக்கு சென்றார். அங்கு தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்தார். இதில் இளையராஜா உடலும், குடிசையும் தீப்பிடித்து எரிந்தது.
தீ பக்கத்தில் இருந்த குடிசைகளுக்கும் மளமளவென்று பரவியது. இதில் அருகில் இருந்த ஐந்து வீடுகள் எரிந்து சாம்பலானது. உடனே அக்கம் பக்கத்தினர் தீயை போராடி அணைத்தனர்.
குடிசைக்குள் உயிருக்கு போராடிய இளையராஜாவை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த தீவிபத்தில் ஐந்து குடிசைகளில் இருந்த ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள டி.வி., ரேடியோ, துணிமணிகள் மற்றும் பாத்திரங்கள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications