தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும்: ஜெயலலிதா

தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவை சேர்ந்த மாக்சிஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் 74 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. ஏர்செல் நிறுவனத்திடம் இருந்து பங்குகள் வாங்கியதால் ஆதாயமடைந்த இந்த மாக்சிஸ் நிறுவனம் தனது மற்றொரு நிறுவனமான அஸ்ட்ரோ நிறுவனம் மூலம் சன் குழுமத்தில் முதலீடு முதலீடு செய்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
இந் நிலையில் இன்று நிருபர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அளித்த பேட்டி:
தயாநிதி மாறன் பிரதமரைச் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் இதில் தேவையான நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும். தயாநிதி மாறனும் பதவி விலகி சட்டத்தை எதிர் கொள்ள வேண்டும். 2ஜி விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும், தற்போது விசாரணை சரியான திசையில் செல்கிறது என்றார்.
நீங்கள் டெல்லியில் பிரதமரைச் சந்திக்கும்போது, தயாநிதி மாறன் குறித்து பேசுவீர்களா என்று கேட்டதற்கு, 2ஜி விவகாரம் நீதிமன்றத்தில் விவகாரம் உள்ளதால் நாம் மேற்கொண்டு இதுபற்றி விவாதிக்கவோ சொல்லவோ அவசியம் இல்லை. எனவே, இதுபற்றி பிரதமரிடம் பேச வாய்ப்பு இல்லை என்றார்.
மீண்டும் தோடு அணிவது ஏன்?:
கேள்வி: நீண்ட நாட்களாக நீங்கள் நகைகள் எதுவும் அணிவதில்லை. இப்போது காதில் தோடு அணிந்து இருக்கிறீர்களே?
பதில்: 1997ம் ஆண்டுக்குப் பின் நகைகள் அணிவதை நான் விட்டு விட்டேன். ஆனால் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் என்னை சந்திக்கும போதெல்லாம் நகை அணிய வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார்கள். சட்டசபை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதும் தொண்டர்கள் என் வீட்டு முன்பு குவிந்தார்கள். அப்போது உடன்பிறப்புகள் நான் நகை அணிய வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
பல்வேறு தவறுகளை செய்த கருணாநிதி குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் ஏன் நகை அணியாமல் இருக்கிறீர்கள். நகை அணியாவிட்டால் தீக்குளிப்போம் என்று கூறினார்கள். எங்கள் கட்சி தொண்டர்கள் சொன்னதை செய்து விடுவார்கள். ஒரு பெண் தொண்டர் நாக்கை அறுத்துக் கொண்டார். இன்னொருவர் கை விரலை துண்டித்துக் கொண்டார். எனவே தொண்டர்கள் விருப்பத்துக்கு ஏற்று காதில் தோடு அணிந்து இருக்கிறேன்.
நாக்கை அறுத்துக்கொண்ட பெண்ணுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்து இருக்கிறேன். சில பத்திரிகைகளில் இது போன்ற செயல்களை நான் ஊக்கப்படுத்துவதாக எழுதுகிறார்கள். அது உண்மை இல்லை. அந்த பெண் கணவரால் கைவிடப்பட்டவர். 2 குழந்தைகள் உள்ளன. அவருக்கு வருமானம் எதுவும் இல்லை. எனவே அரசு வேலை கொடுக்கப்பட்டு இருக்கிறது.
கேள்வி: முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது செம்மொழி கவிதை பாடத்தில் இடம் பெற்றதால் தான் சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தியதாக கூறியிருக்கிறாரே?
பதில்: அவரது கருத்து குழந்தைதனமானது. சமச்சீர் கல்வியை தரமானதாக உயர்த்த வேண்டும் என்பதற்காக அமைச்சரவை கூட்டத்தில் சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்க முடிவு எடுக்கப்பட்டது. அதை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மின் கட்டண உயர்வில்லை:
கேள்வி: மின் வாரியத்துக்கு கடன் சுமை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே மின்சார கட்டணம் உயருமா?
பதில்: அப்படி எந்த எண்ணமும் இல்லை. தமிழக மக்களுக்கு சுமையை அதிகரிக்கும் எந்த நடவடிக்கையும் அரசு எடுக்காது. 2001ல் அதிமுக ஆட்சி நடந்தபோது மின் தடை இல்லை. எல்லா நேரமும் மின்சாரம் இருந்தது. பின்னர் வந்த திமுக அரசின் தவறான நிர்வாகத்தாலும், மின் உற்பத்தி மையங்களை சரியாக பராமரிக்காததாலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
தரமற்ற நிலக்கரியை அனல் மின் நிலையங்களுக்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ததும் மின் உற்பத்தி பாதிப்புக்கு காரணம். இந்த நிலைமையை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். விரைவான நடவடிக்கையால் மின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டப்படி கூடுதலாக 5,000 மெகாவாட் மின்சாரத்தை அதிகமாக உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கேள்வி: தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தி விட்டதாக புகார் கூறப்படுகிறதே?
பதில்: அரசு இதில் தானாக தலையிட முடியாது. புகார் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி: தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை உயர்த்தி விட்டதாக சிலர் போராட்டம் நடத்தி வருகிறார்களே?
பதில்: போராட்டம் நடத்த வேண்டிய அவசியமில்லை. பெற்றோர் ஆதாரத்துடன் புகார் செய்தாலோ, பள்ளி நிர்வாகம் முறையிட்டாலோ அரசு நிர்வாகம் தலையிட்டு பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்கும்.
கேள்வி: டி.ஜி.பி. நடராஜுக்கு பதவி வழங்க வேண்டும் என்று மத்திய நிர்வாக தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளதே?
பதில்: நேற்றுதான் தீர்ப்பு வந்துள்ளது. அதுபற்றி அரசு பரிசீலித்து வருகிறது. ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
ஜெயலலிதாவுடன் பிரகாஷ் காரத் சந்திப்பு:
இந் நிலையில் ஜெயலலிதாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் பிரகாஷ் காரத் இன்று நேரில் சந்தித்து சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
முதல்வர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்:
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவையின் 3வது கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அரசின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications