நான் யாருக்கும், எந்த நிறுவனத்திற்கும் சலுகை காட்டவில்லை: தயாநிதி மாறன்

2004ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்து வந்தார். அப்போது இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் வெளிநாட்டினர் முதலீடு செய்யும் விதிமுறைகள் மாற்றப்பட்டன. இந்திய நிறுவனங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை 24 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயரித்திக் கொள்ள அனுமதி தரப்பட்டது.
தமிழகத்தில் ஏர்செல் நிறுவனம் முதலில் ஒரு மண்டலத்தில் செயல்பட்டு வந்தது. பின்னர் இந்த நிறுவனத்துக்கு 14 மண்டலங்களில் சேவை வழங்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்த ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவை சேர்ந்த மாக்சிஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் 74 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. ஏர்செல் நிறுவனத்திடம் இருந்து பங்குகள் வாங்கியதால் ஆதாயமடைந்த இந்த மாக்சிஸ் நிறுவனம் தனது மற்றொரு நிறுவனமான அஸ்ட்ரோ நிறுவனம் மூலம் சன் குழுமத்தில் முதலீடு முதலீடு செய்திருப்பதாக தெகல்கா இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதுகுறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டும், பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும், தயாநிதி மாறன் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்று பாஜக, அதிமுக ஆகியவை போர்க்கொடி உயர்த்தியுள்ளன. தயாநிதி மாறன் விலக வேண்டும் என பிரதமர் உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இந்த சர்ச்சை குறித்து சிபிஐயும் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. விரைவில் தயாநிதி மாறனிடமும் சிபிஐ விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து தயாநிதி மாறன் நேற்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலை சந்தித்துப் பேசினார். அந்த ஆலோசனைக்குப் பின்னர் அவர் பதவி விலகுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் விளக்க அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டார்.
அதில்,
நான் அமைச்சராக இருந்தபோது எனது குடும்பத்தினரின் நிறுவனமான சன் டிவி எந்த வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்தும் பணம் பெறவில்லை. நான் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது எந்த நிறுவனத்துக்கும் சலுகை காட்டி தொலைத்தொடர்பு சேவைக்கான உரிமத்தை வழங்கவுமில்லை.
2004 மே முதல் 2007 மே வரை நான் மத்திய அமைச்சராக இருந்தேன். அப்போது சன் டைரக்ட் நிறுவனத்தில் ஆஸ்ட்ரோ நிறுவனம் முதலீடு செய்யவில்லை. அவர்கள் முதலீடு செய்தபோது நான் அமைச்சர் பதவியிலேயே இல்லை. மேலும் இந்த நிறுவனங்களில் எனக்கு எவ்விதப் பங்குகளும், பொறுப்புகளும் இல்லை.
ஏர்செல் நிறுவனத்துக்கு அரசின் விதிகளுக்கு உள்பட்டே உரிமம் வழங்கப்பட்டது. உரிமம் தரும் விஷயத்தில் என்னால் அரசுக்கு ஒரு பைசா கூட இழப்பு ஏற்படவில்லை.
என்னுடைய பதவிக் காலத்தில் உரிமம் வழங்கும் விஷயத்தில் அரசுக்கு எவ்வித இழப்பும் ஏற்பட்டதாக, தலைமை தணிக்கை அலுவலரின் தணிக்கை அறிக்கையில் கூட குறிப்பிடப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications