தமிழகத்திற்கு 65,140 லிட்டர் மண்ணெண்ணய்யை விடுவிக்க ஜெ. கோரிக்கை
சென்னை: தமிழகத்திற்கு மத்திய அரசு மாதந்தோறும் வழங்கும் மண்ணெண்ணையின் அளவை 65 ஆயிரத்து 140 லிட்டராக அதிகரிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதம்:
பொது விநியோகத் திட்டத்தின் முக்கிய அங்கமாக இருப்பது மண்ணெண்ணெய் ஆகும். மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய்யின் அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
தமிழகத்தில் மொத்தம் 1.95 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்களில் பலருக்கு உரிய விதிகளின்படி மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.
மாநிலத்துக்கு மத்திய அரசிடம் இருந்து மாதந்தோறும் ஒதுக்கப்படும் மண்ணெண்ணெயின் அளவு 65 ஆயிரத்து 140 கிலோ லிட்டராகும். ஆனால் இதன் அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டு ஜூன் மாதத்தில் 44 ஆயிரத்து 580 கிலோ லிட்டராக வழங்கப்படுகிறது.
மார்ச் மாதம் வரை தமிழகத்துக்கு வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய்யின் அளவு 59 ஆயிரத்து 780 கிலோ லிட்டராக இருந்தது. இதற்குப் பிறகு அடுத்த சில மாதங்களில் எண்ணெய்யின் அளவு 52 ஆயிரத்து 806 கிலோ லிட்டராக வழங்கப்பட்டு வந்தது.
இந்த அளவு மேலும் குறைக்கப்பட்டு 44 ஆயிரத்து 580 கிலோ லிட்டராக இப்போது அளிக்கப்படுகிறது.
இப்படி அளவு குறைக்கப்பட்டுள்ளதால் உண்மையான குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தப் பிரச்னையில் தாங்கள் தலையிட்டு தமிழகத்துக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை 44 ஆயிரத்து 580 கிலோ லிட்டர் என்ற அளவில் இருந்து 65 ஆயிரத்து 140 கிலோ லிட்டர்களாக அதிகரிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications