மரத்துக்கும் பாறைக்கும் இடையே சிக்கிய யானை உயிரிழந்தது
காரமடை: தோலம்பாளையம் வனப்பகுதியில் மரத்துக்கும் பாறைக்கும் இடையே நுழைந்த யானை வெளியேற முடியாமல் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
சிக்கிய யானை
கோவை காரமடைக்கு அருகே உள்ள தோலாம்பாளையம் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகம் உண்டு. நேற்று முன் தினம் தங்கவேல் என்பவரின் வாழைத்தோட்டத்திற்குள் யானைக்கூட்டம் ஒன்று நுழைந்தது. மரங்களை உடைத்து சேதப்படுத்திய அந்த யானைக்கூட்டம் தங்களது களியாட்டம் முடிந்து காட்டுக்குள் திரும்பின. அப்போது 20 வயதுள்ள பெண் யானை ஒன்று தோட்டத்திலிருந்த மரத்திற்கும் பாறைக்கும் இடையிலான குறுகலான பகுதிக்குள் நுழைந்தது.
போராட்டம்
மரத்துக்குள் நுழைந்த யானையால் முன்னும் செல்ல முடியவில்லை. பின்னும் செல்ல முடியவில்லை. உடன் இருந்த ஆண் யானை, பெண் யானையை பின்னால் இழுக்க போராடியது. அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, யானை பிளிற துவங்கியது. யானையின் பிளிறல் ஓசை கேட்ட வனவேட்டை தடுப்பு காவலர் சம்பவ இடத்திற்கு விரைந்தார். பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகருக்கும் தகவல் பறந்தது.
மீட்பு பணி
மாவட்ட வன அலுவலர் தலைமையில் வனத்துறையினர் யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மரத்தை வெட்டி அனைத்து தடுப்புகளையும் அப்புறப்படுத்தினர். ஆனாலும், யானையால் எழுந்து கொள்ள முடியவில்லை. வாழை, கரும்பு, தென்னை மட்டையை வெட்டி யானை முன் போட்டனர். யானையால், எழுந்து நிற்கக்கூட முடியவில்லை. வாளியில் வைத்த தண்ணீரை மட்டும் கொஞ்சம் உறிஞ்சி தன் உடல் மீது தெளித்துக்கொண்டது.
பரிதாப மரணம்
யானையின் உடல் சூட்டை தணிக்க அதன் உடல் மீது சாக்குகள் போர்த்தி வனத்துறையினர் நீரைப் பாய்ச்சினார். வனத்துறையினர் யானையை எழுந்து நிற்க வைக்க பல வகைகளில் முயன்றனர். ஆனாலும் மதியம் 2 மணிக்கு நான்கு கால்களையும் நீட்டி பெருமூச்சு விட்ட யானை, சற்று நேரம் கழித்து அமைதியாக உயிரை விட்டது. பல மணிநேரங்கள் போராடியும் யானையை உயிருடன் மீட்க முடியாத வனத்துறையினர், கனத்த சோகத்துடன் யானையை அடக்கம் செய்தனர்.












Click it and Unblock the Notifications